வங்கதேச ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலி
டாக்கா: வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாட்டவராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் குல்ஷன் என்ற புறநகர் பகுதியில் ஆர்ட்டிசன் பேக்கரி கபே என்ற ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் இரவு 9 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

மேலும் பொதுமக்கள் சிலரை பிணை கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். தற்போது அந்த பகுதி பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தப் பகுதியில் பல்வேறு நாடுகளில் தூரகங்கள் உள்ளதால் அங்கும் பதட்டமும் பரபரப்பும் காணப்படுகிறது. இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இது ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பின் சதிச்செயலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலும் அந்த அமைப்பினரின் சதித் திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications