6 மாதங்கள் தனக்குத் தானே போராடி... ரூ. 1 லட்சம் செலவில் சாண்ட்விச் தயாரித்த யுஎஸ் இளைஞர்
நியூயார்க்: தனக்கான சாண்ட்விச்சை தானே உருவாக்கி சாப்பிட வேண்டும் என ஆறு மாதங்கள் பாடுபட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயும் செலவு செய்துள்ளார் அமெரிக்க இளைஞர் ஒருவர்.
எளிதான கைல காசு, வாயில தோசை என சந்தையில் கிடைக்கும் பல பொருட்களுக்கு பின்னணியில் பல தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது. இதனை மற்றவர்களுக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்கினார் அமெரிக்க இளைஞரான ஜார்ஜ்.
இதற்காக இவர் கையில் எடுத்தது சாண்ட்விச் தயாரிக்கும் முயற்சி.
தோட்டம்..
தனது சாண்ட்விச்சிற்கான காயை தானே விளைவிக்க நினைத்தார் ஜார்ஜ். இதற்காக சிறிய தோட்டம் ஒன்றை அவர் உருவாக்கினார். பின்னர் கடலில் நீர் எடுத்து சொந்தமாக உப்பும் தயாரித்தார்.
கைது...
அந்த உப்பை கஸ்டம்ஸில் கொண்டு வர முயற்சித்த போது, அதை போலீசார் உப்பு என நம்பவில்லை. இதனால், ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஒரு வழியாக அவர் விடுதலையானார். ஆனால், தனது சாண்ட்விச் தயாரிக்கும் கனவை அவர் கைவிடவில்லை.
பால், தேன், சீஸ்...
தனது மாட்டின் பாலைக் கறந்து, அதில் வெண்ணெய், சீஸ் போன்றவற்றை தானே தயார் செய்தார். வெள்ளரிக்காயை உப்பில் ஊறவைத்து ஊறுகாயாக்கி, தானே சென்று தேன்கூட்டிலிருந்து தேன் எடுத்து, கோதுமை மணிகளைக் கொண்டு தனக்கான பிரட்களை தயாரித்து என தனக்கான தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொண்டார்.
கோழி...
இறுதியாக சாண்ட்விச்சிற்கு தேவையான கோழிக்கறிக்காக ஆசையாக தான் வளர்த்த கோழியைக் கொன்றார். இறுதியில் போராடி தனக்கான சாண்ட்விச்சை அவர் தயாரித்தார்.
ஒரு லட்ச ரூபாய் செலவு...
இந்த ஒரு சாண்ட்விச்சை தயாரிக்க ஜார்ஜுக்கு ஆறு மாத காலமும், ஆயிரத்து ஐநூறு அமெரிக்க டாலர்கள் செலவும் ஆனது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் ஆகும்.
வீடியோ...
தனது இந்த முயற்சிகளை வீடியோவாக்கி அதனை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் ஜார்ஜ். சுமார் 4 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் தான் சாண்ட்விச் தயாரித்த கதையை 16 ஸ்டெப்புகளாக அவர் விளக்கியுள்ளார்.
பார்வையாளர்கள்...
இந்த வீடியோவை வெளியான நான்கே தினங்களில் சுமார் 14 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சுமார் 1300 பேர் இந்த வீடியோ குறித்து கருத்துப் பதிவு செய்துள்ளனர்.