பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதி ஹபீஸ் சையது கதையை முடிக்க இந்தியா திட்டம்?
இஸ்லாமாபாத்: மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சையதை பாகிஸ்தான் நாட்டுக்குள் வைத்தே போட்டுத்தள்ள 'வெளிநாட்டு உளவு' அமைப்பு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவருக்கு பாகி்ஸ்தான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத வெறியாட்டத்தில், 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஹபீஸ் சையது
இந்த தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஹபீஸ் சையது என்ற தீவிரவாதி ஏற்படுத்திய ஜமாத்-உத்-தவ்வா என்ற தீவிரவாத அமைப்பு என்பது தெரியவந்தது. தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது பாகிஸ்தானில் ஒரு சமூக சேவகர் என்ற போர்வையில் நடமாடி வருகிறார்.

பாகிஸ்தான் மறுப்பு
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்ட போதிலும் பாகிஸ்தானில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்ற காரணத்தை கூறி டெல்லியின் கோரிக்கையை இஸ்லாமாபாத் நிராகரித்துவிட்டது.

பாதுகாப்பு
இந்நிலையில், திடீரென ஹபீஸ் சையதுவிற்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து பஞ்சாப் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண அரசு கூறியுள்ளது.

வெளிநாட்டு அமைப்பாம்
வெளிநாட்டு உளவு அமைப்பு ஹபீஸ் சையது மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்க பாணி
இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் தேடப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக்கொன்றது. அதே பாணியில், ஹபீஸ் சையது மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தானுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவா, இந்தியாவா?
ஹபீஸ் சையது மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள அந்த வெளிநாட்டு உளவு அமைப்பு இந்தியாவை சேர்ந்ததா அல்லது அமெரிக்காவினுடையதா என்பதை பாகிஸ்தான் வெளியிட மறுத்துவிட்டது. ஏனெனில் அமெரிக்காவும் ஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உயிருக்கும் வெளிநாட்டு அமைப்பால் ஆபத்துள்ளதாக பாகிஸ்தான் அலறிவருகிறது.












Click it and Unblock the Notifications