ஹைதி நாட்டில் உச்சக்கட்ட பதற்றம்.. வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்.. நள்ளிரவில் பரபரப்பு
ஹைதி: ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோயிஸ் அவரது வீடு புகுந்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மற்றும் வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஹைதி. இதன் அதிபராக ஜோவெனல் மோயிஸ் என்பவர் இருந்தார்.
ஜோவெனல் மோயிஸ் மீது பல ஆண்டுகளாக ஊழல் புகார்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு மோசமான பஞ்சமும் நிலவி வருகிறது.

ஹாதி
ஹாதி உள்ள 60% மக்கள் தினசரி 2 டாலருக்குக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இதனால் அங்கு சில ஆண்டுகளாகவே அமைதியற்ற சூழலே நிலவி வந்தது. அந்நாட்டின் தலைநகரிலும்கூட அரசுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் அவ்வப்போது நிலவி வந்தது. குறிப்பாக இவரது பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது.

சுட்டுக்கொலை
இதனால் எதிர்க்கட்சிகள் இவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இருப்பினும், பதவி விலக மறுத்த ஜோவெனல் மோயிஸ் தனது அதிபர் பதவியை மேலும் ஓராண்டுக் காலம் நீட்டித்துக் கொண்டார். இதனால் ஜோவெனல் மோயிஸுக்கு எதிரான மக்கள் மனநிலை பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் அவரது வீட்டில் புகுந்த சில மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

மனைவி காயம்
இந்தத் தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவி, அங்குள்ள மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோவெனல் மோயிஸ் கொலை செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இருவர் கைது
அதிபர் ஜோவெனல் மோயிஸ் கொல்லப்பட்டதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நான்கு கூலிப் படையினரை ஹைதி போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று போலீசாரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹைதி நாட்டின் தேசிய காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications