சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹலீமா யாகோப் தேர்வு
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஹலீமா யாகோப். சிங்கப்பூரின் 8வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்துவந்த டோனி டான் கெங் யாமின் பதவிக்காலம், கடந்த மாதம் 31ஆம் தேதி முடிந்தது. அங்கு, அதிபரின் பதவிக்காலம் 6 வருடங்கள். இந்தத் தேர்தலில், மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடலாம் எனக் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப்,63 உள்பட 5 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
தொழிலதிபர்கள் முகமது சலே மரிக்கான் மற்றும் பரீத் கான் ஆகிய இருவரின் மனுக்கள், தகுதிக்கு குறைந்தபட்ச தேவையான 2 விதிமுறைகளில் ஒன்றை பூர்த்தி செய்யாததால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால் அந்த 2 போட்டியாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மலாய் இனத்தை சேர்ந்த ஹலீமா யாகோப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலை சந்திக்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப் கூறியுள்ளார். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் ஹலீமா யாகோப். ஹலீமாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று இஸ்தானாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 8வது அதிபராக ஹலீமா யாகோப் பதவியேற்கிறார்.