நேபாளத்தில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு- 54 பேர் பலி; மீட்பு பணிகள் மும்முரம்
காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 54 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
நேபாள நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவமழை சீசன். இந்த பருவமழை காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு பருவமழை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி மிதக்கின்றன. அங்குள்ள டினாவ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் பல ஊர்களுக்குள் புகுந்தது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. மியாக்டி என்ற மாவட்டத்தில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாக புதைந்ததில் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் நேபாள ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications