ஜப்பானில் கடும் பனிப்பொழிவு... 169 பேர் காயம் - 200 விமானங்கள் ரத்து.. கரண்ட் இல்லை!
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால், இதுவரை 169 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தரையிலிருந்து முப்பது சென்டிமீட்டர் அளவிற்கு பனி படர்ந்துள்ளது.
இதனால் சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மின் தடை...
பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து...
மேலும் பலத்த காற்றும் வீசுவதால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல காலதாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன.

பெரும் பாதிப்பு...
ஹொக்கைடோ, ஹோகுரிக்கு, டோகாய் ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பனிப்பொழிவு நீடிக்கும்...
இந்த நிலை நீடிக்கும் என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications