யு.எஸ்.சில் கடும் பனிப்புயல்.. 19 பேர் பலி: 12,000 விமானங்கள் ரத்து.. 11 மாகாணங்களில் அவசர நிலை!
நியூயார்க்: அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் 19 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. ஜோனாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்புயலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பனிப்புயலில் சிக்கி ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் பலியாகியுள்ளனர்.

பலி
அர்கன்சாஸ், வடக்கு கரோலினா, கென்டுக்கி, டென்னிசி, வெர்ஜினியா, ஒஹாயோவில் பனிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்துகளில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர்.

நியூயார்க்கில் 3 பேர் பலி
மேலும் மேரிலேண்டில் ஒருவரும், நியூயார்க்கில் 3 பேரும் பலியாகியுள்ளனர். வெர்ஜினியாவில் குளிரை தாங்க முடியாமல் 2 பேர் பலியாகியுள்ளனர்.

அவசர நிலை
அமெரிக்காவின் 11 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பனிப்புயலால் 12 ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

35 மைலுக்கு போக்குவரத்து பாதிப்பு
நியூ ஜெர்சி மற்றும் கென்டுக்கியில் பனிப்புயலால் 35 மைல் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் 24 மணிநேரம் அவதிப்பட்டனர்.

நியூயார்க்
பனிப்புயலால் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது. நியூயார்க்கில் 25 இன்ச் அளவுக்கு சாலைகளில் பனியாக உள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பனிப்புயலால் அமெரிக்காவில் உள்ள 20 மாநிலங்களில் வசிக்கும் 85 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரியா
தென் கொரியாவின் பிரபல சுற்றுலா தீவான ஜிஜூ தீவில் கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவாக உள்ளது. தீவில் இருக்கும் மலைகளில் 1 மீட்டர் அளவுக்கு பனியாக உள்ளது.

விமான நிலையம் மூடல்
பனிப்புயலால் நேற்று 296 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது, மேலும் இன்று 517 விமானங்களும், நாளை இயக்கப்படவிருந்த 60 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தீவில் உள்ள விமான நிலையம் இன்று இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications