இஸ்ரேலின் அடுத்த சக்சஸ்.. ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொலை.. அட இவர் அமெரிக்காவையே அலற வைத்தவராச்சே!
பெய்ரூட்: பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்களை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் லெபனான் நாட்டின் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார். இவரை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் அவர் இறந்துள்ளார். இது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் இப்ராஹிம் அகில் யார்? அவரது பின்னணி என்ன? அமெரிக்கா ஏன் அவரை தேடியது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் அமைப்பை அழிக்க பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் தொடங்கி வருகிறது. இந்த போருக்கு காரணம் ஹமாஸ் தான். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தி அந்த நாட்டுக்குள் நுழைந்து 200க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது தான் போருக்கு முக்கிய காரணம்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல், காசவில் நுழைந்து போரை நடத்தி வருகிறது. அடுத்த மாதம் வந்தால் இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெறும். காசா மீதான இந்த போருக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரான், லெபனான் உள்பட பல நாடுகள் போரை கைவிடும்படி இஸ்ரேலிடம் கூறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே தான் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கியது முதல் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை அடுத்தடுத்து வெடிக்க வைத்து இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. பேஜர், வாக்கி டாக்கியின் பேட்டரி பகுதயில் பிடிஇஎன் வெடிப்பொருளை வைத்து இந்த தாக்குதலை இஸ்ரேலின் ‛மொசாட்' உளவு அமைப்பு நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா ராக்கெட், ஏவுகனை தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது.
இதனை தனது தொழில்நுட்ப சாதனம் மூலம் இடைமறித்து இஸ்ரேல் முறியடித்தது. அதுமட்டுமின்றி ஹிஸ்புல்லாக்கள் அதிகம் வசிக்கும் லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இஸ்ரேல் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான பல கட்டிடங்களும் ஆயுதக் கிடங்குகளும் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 14 பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 10 பேர் ஹிஸ்புல்லா படையின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று நடந்த வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி கொலை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹிஸ்புல்லாவின் முக்கிய படைப்பிரிவுகளில் ஒன்றான ரட்வானின் தளபதி இப்ராஹிம் அகில் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை அமெரிக்காவும் தேடிவந்தது. அதோடு இப்ராஹிம் அகிலின் தலைக்கு அமெரிக்கா $7 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பரிசு தொகையை அறிவித்து இருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 1980ம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய மக்களை பணய கைதிகளாக கடத்தப்பட்டனர். அதில் இப்ராஹிம் அகிலுக்கு தொடர்பு இருந்தது. அதுமட்டுமின்றி லெபனானில் உள்ள பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகம் மற்றும் மரைன் முகாம்கள் மீது கடந்த 1983ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தான் காரணம். இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இப்ராஹிம் அகிலுக்கு தொடர்பு இருந்தது.
இப்ராஹிம் அகில் அமெரிக்காவிடம் பிடிபடாமல் தப்பி வந்த நிலையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இப்ராஹிம் அகில் இறந்ததை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த பதிவில், ‛‛உளவுத்துறை தகவலின்படி பெய்ரூட்டில் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் எலைட் ராட்வான் படையின் கமாண்டர் மற்றும் ஆபரேஷன் யூனிட்டின் தலைவராக இருந்த ஹிஸ்புல்லா அகில் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேலியர்கள் கடத்தி கொல்லப்பட்டது போன்ற சம்பவத்தை மீண்டும் நிகழ்த்த இவர் நினைத்தார். தற்போது அவர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் இந்த படையில் உள்ள மேலும் சிலரும் இறந்துள்ளனர். ஹிஸ்புல்லாவின் படைகளில் உள்ளவர்களை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை அகற்றி கொண்டே வரும்'' என கூறப்பட்டு இருந்தது. இதனால் இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவும் ஹேப்பியாகி உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது உலக நாடுகள் இடையே புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் - காசா இடையேயான இந்த போர் என்பது இஸ்ரேல் - லெபனான் இடையேயான மோதலாக உருமாறி வருகிறது. இதனால் விரைவில் இஸ்ரேல் - லெபனான் போர் உருவாகலாம் என்ற பீதி உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் - லெபனான் இடையே போர் மூளும் பட்சத்தில் இஸ்லாமிய நாடுகள் சும்மா வேடிக்கை பார்க்காது. இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இணையும். அப்படி இருக்கும்போது இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் சில நாடுகள் களத்தில் குதிக்கும். இது இன்னும் மோதலை அதிகரித்து உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications