வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்!
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் பலியாகியுள்ளது இந்திய வம்சாவளியை சேர்ந்த கோயில் பூசாரி அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது முதியவராகும். இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஜெனைடா என்ற பகுதியில் நேற்று காலை இந்த கொலை நடந்துள்ளது. முதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள், பிறகு கங்குலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

சைக்கிள் ஓட்டியபடி, நல்டங்கா பஜார் பகுதியிலுள்ள கோயிலுக்கு பூஜை செய்ய கங்குலி சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
இந்த கொலைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜெனைடா பகுதியை சேர்ந்த சமிர் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் முஸ்லிமாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிய நிலையில் இந்த கொலை நடந்திருந்தது.
கடந்த 2 தினங்களில் வங்கதேசத்தின், மத பெரும்பான்மையினரால் கொலை செய்யப்பட்ட 2வது நபர் கங்குலியாகும். நடோர் பகுதியில் ஒரு கிறிஸ்தவர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்துவான, கங்குலியும் கொல்லப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்கம் வங்கதேசத்தில் வலுவாகி வருவதற்கான அறிகுறிகளாகவும், இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. பிற மதத்தவர் மட்டுமின்றி, நடுநிலையாளர்களும் கடந்த சில நாட்களாக தாக்குதலுக்கு உள்ளாகி வருவது வங்கதேசம் மற்றொரு ஆப்கனாக மாறிவருவதற்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications