இந்தியாவின் எந்த பகுதியையும் எந்த நேரத்திலும் தாக்குவோம்... மிரட்டும் 'ஹிஸ்புல்' சலாவுதீன்
எங்களின் முழுநேர இலக்கு இந்தியா தான் என்று ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவூதீன் பகிரங்கமாகக் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர்: இந்தியா மட்டுமே எங்களது முழுநேர இலக்கு என்று ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவூதீன் பகிரங்கமாகக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவரான சையத் சலாவூதீனை சர்வதேச தீவிரவாதியாக, அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது.
இதையடுத்து, அவரையும், அவரின் இயக்கப் பணிகளையும் முடக்கும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த சலாவூதீன், "இந்தியாவில் நீண்ட காலமாக, பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வந்துள்ளோம். இந்தியாவில் இனிவரும் நாட்களிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவோம். இந்தியாவே எங்களது முழுநேர இலக்கு,'' எனக் கூறியுள்ளார்.
மேலும், காஷ்மீர் எங்களது தாய்வீடு என்றும், காஷ்மீர் மட்டுமின்றி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆதரவைப் பெற்றுள்ளதால், அந்நாட்டின் எந்த பகுதியையும் தாக்க, எங்களால் முடியும் என்றும், சலாவூதீன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சர்வதேச சந்தைகளில் இருந்து, ஆயுதங்களை வாங்கியே, தங்களது தீவிரவாத இயக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த பேட்டியில் சலாவூதின் தெரிவித்துள்ளார். இது இந்தியா மட்டுமின்றி, சர்வதேச நாடுகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.