மருத்துவமனையில் இப்படி செய்யலாமா! ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் வெளியிட்ட ஷாக் வீடியோ! வெடித்த சர்ச்சை
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சண்டை ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட பகீர் வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் ஹமாஸ் படை எதிர்பாராத விதமாகத் தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றன.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் படை, அங்குள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து அழித்து வருகிறது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை சண்டை தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்: இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாகப் பாதுகாப்பு கேமரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹமாஸ் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணையக் கைதிகளை காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தங்க வைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. கடந்த அக். 7ஆம் தேதி கடத்தப்பட்ட அந்த பிணையக் கைதிகள் காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதில் வீடியோ ஒன்றில் பல பிணையக் கைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் அழைத்து வருகிறார்கள். அவர்கள் கைகளில் அதிநவீனத் துப்பாக்கிகளும் இருக்கிறது. மருத்துவமனையில் இருக்கும் மற்றவர்கள் இவர்களை அதிர்ச்சியுடன் பார்க்க, அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளை மிரட்டி இழுத்துச் செல்கிறார்கள். இந்த வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து இணையத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
என்ன சொன்னார்: இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "இந்த வீடியோவில் ஹமாஸ் பிணையக் கைதிகளை இழுத்துச் செல்வதை நீங்கள் பார்க்கலாம். அப்பாவி மக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் இணைந்து மருத்துவமனைக்குள் இழுத்துச் செல்கிறார்கள். இதில் உள்ள பிணையக் கைதிகள் நேபாளம் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். தற்போது வரை அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா.. இல்லையா.. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என எந்தவொரு தகவலும் தெரியவில்லை" என்றார்.
இந்த வீடியோவில் இருக்கும் நேரத்தை வைத்துப் பார்க்கும் போது இது 2023 அக். 7ஆம் தேதி எடுக்கப்பட்டது போல தெரிகிறது. அன்றைய தினம் தான் தெற்கு இஸ்ரேல் நாட்டில் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1200 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 240 பேர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
சரமாரி தாக்குதல்: அப்போது முதலே காசா மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வந்தன. சமீப காலங்களாகக் காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தின. அந்த தாக்குதல்கள் சர்ச்சையான நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் கீழ் உள்ள சுரங்கங்களை ஹமாஸ் கட்டுப்பாட்டு மையமாகப் பயன்படுத்துவதாகவும் அங்கே பிணையக் கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டினர். அதற்கு ஆதாரமாகவே இந்த வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சண்டை முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினாலும் கூட இஸ்ரேல் அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தே வருகிறது.












Click it and Unblock the Notifications