பரிசுப் பணத்தை சென்னை நிவாரணத்திற்கு அனுப்பிய ஹூஸ்டன் தமிழ் மாணவர்கள்!
ஹூஸ்டன்(யு.எஸ்): டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர தமிழ்ப் பள்ளி மாணவர்கள், திருக்குறள் போட்டியில் வென்ற டாலர் பணத்தை சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.
அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களில் ‘ஒரு குறள் ஒரு டாலர்' திருக்குறள் போட்டி பல்வேறு தன்னார்வ அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகிறது.

ஹூஸ்டனில் நீண்ட காலமாக செயல்பட்டு வருக் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி தற்போது கேட்டி, உட்லண்ட்ஸ், பியர்லேண்ட், வெஸ்ட் ஹூஸ்டன் மற்றும் சுகர்லேண்ட் என ஐந்து நகரங்களில் கிளைப் பள்ளிகளாக நடைபெறுகிறது. இந்த பள்ளிகள் அனைத்திலும் டிசம்பர் 11, 12, ஜனவரி 9ம் தேதிகளில் திருக்குறள் போட்டி நடைபெற்றது.

பொருளுடன் குறள் கூறினால் 1 டாலர், குறள் மட்டும் கூறினால் 50 சென்ட்ஸ் என்று பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் 250 மாணவர்கள் பங்கேற்று, 3000 டாலர்கள் பரிசுத் தொகையை பெற்றனர். கிட்டத்தட்ட 3500 தடவை திருக்குறள்கள் குழந்தைகளால் ஓதப்பட்டது என்றே சொல்லலாம்.
பவித்ரா சந்திரசேகரன் எனும் பதினோரு வயது மாணவி 270 குறட்பாக்களை ஒப்புவித்து 230 டாலர்களுடன் சிறப்புப் பரிசை தட்டிச்சென்றார். 4 வயதுடைய மழலைகள் கூட, குறள்களை விளக்கத்துடன் ஒப்புவித்தது வியப்பளிப்பதாக இருந்தது.

ஹூஸ்டன் பெருநகரத் பள்ளி சாராத தமிழ்ப்பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நடுவர்களாகப் பணியாற்றினர், சில பெற்றோர்கள் நன்கொடை வழங்கி போட்டிக்காக உதவி புரிந்தனர். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பெற்றிருந்த பரிசுக்கு இணையாக அவர்களும் பரிசுகள் வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினர்.

அண்மையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயர் துடைக்க, ஹூஸ்டன் பெருநகரப் பள்ளி வெள்ள நிவாரண நிதியாக சுமார் 10,000 டாலர்கள் நன்கொடைகள் பெற்று வழங்கியது. பல மாணவர்ள் தாங்கள் வென்ற திருக்குறள் பரிசுத்தொகையை சென்ன வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது.
முருகானந்தம் ஆறுமுகம் தலைமையிலான தன்னார்வலர் குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-இர தினகர்












Click it and Unblock the Notifications