சீனா செய்த காரியம்.. மொத்தமாக காலியாகும் பாகிஸ்தான் கழுதைகள்.. என்ன தான் நடக்கிறது! முக்கிய தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தனக்குத் தேவையான முக்கியமான ஆயுதங்களைச் சீனாவிடம் தான் வாங்கியது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் சீனாவும் கூட பாகிஸ்தானில் இருந்து ஒரு விஷயத்தை வாங்கி குவித்து வருகிறது. அது பலருக்கும் தெரியாமலேயே இருந்து விடுகிறது. சீனா அப்படி என்ன வாங்கி வருகிறது என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இதனால் பாகிஸ்தான் இப்போது சீனாவிடம் இருந்து புதிய ஜெட்களை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், சீனாவிடம் பல நவீன ஆயுதங்களை வாங்கத் திட்டமிட்டு வருகிறது.

கழுதை
அதேநேரம் பாகிஸ்தானிடம் இருந்து சீனாவும் ஒரு விஷயத்தைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி குவித்து வருகிறது. அப்படி என்ன சீனாவிடம் இல்லாதது பாகிஸ்தானிடம் இருக்கு என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. அதுதான் கழுதைகள்.. ஆம், பாகிஸ்தான் கழுதைகளைச் சீனா வாங்கி குவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் ஒரு பொருளாதாரமே புதிதாக உருவாகியுள்ளது என சொல்லலாம். இதற்கான காரணத்தையும் பின்னணியையும் நாம் பார்க்கலாம்.
பாகிஸ்தான் கடந்த சில காலமாகவே கழுதைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இப்போது பாகிஸ்தான் கழுதைகள் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகப் பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதாவது உலகிலேயே இப்போது எத்தியோப்பியா மற்றும் சூடானுக்கு அடுத்து, கழுதைகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தே வருகிறது.
பாகிஸ்தானில் என்ன நடக்கிறது
பாகிஸ்தானின் முறைசாரா பொருளாதாரம், அதாவது சுமை இழுப்பது உள்ளிட்ட குறைந்த ஊதியம் தரும் வேலைகளில், கழுதைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செங்கல் சூளைகள், விவசாயம், போக்குவரத்து, கழிவு சேகரிப்பு ஆகிய துறைகளில் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதன் கழுதைகளின் மதிப்பும் கூட குறைவாகவே இருந்தது. ஆனால், சீனா சில காலமாகப் பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை வாங்கி குவித்து வரும் நிலையில், அதன் விலையும் தாறுமாறாக உயர ஆரம்பித்துவிட்டது.
காரணம் என்ன
கழுதைகளின் தோல்கள் எஜியா தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எஜியா என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ஜெலட்டின் ஆகும். இது கழுதை தோலை வேகவைத்துத் தயாரிக்கப்படுகிறது. இந்த எஜியாவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று சீனர்கள் கருதுகிறார்கள்.
பின்னணி
முதலில் சீனாவில் இருந்த கழுதைகள் மூலமாகவே இதைத் தயாரித்தனர். இருப்பினும், இந்த ஜெலட்டின் தேவை அதிகரித்ததால் கடந்த சில ஆண்டுகளில் சீன கழுதைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த 1990களில் உச்சத்தில் இருந்த கழுதைகளின் எண்ணிக்கை இப்போது 5ல் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் பக்கம் சீனா வந்துள்ளது. பாகிஸ்தானிலும் கூட சீனா அதிக கழுதைகளை வாங்கி குவிப்பதால் விலை அதிகரித்துவிட்டது. பாகிஸ்தான் சந்தைகளில் இப்போது நல்ல கழுதைகளின் விலை ரூ.1.50 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை கூட விற்பனையாகிறதாம்.
கழுதை பண்ணை
சீனாவின் எஜியா தொழில் கடந்த 5 ஆண்டுகளில் 160% வளர்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான கழுதை தோல்கள் தேவைப்படுகிறது. இது பாகிஸ்தானில் மிகப் பெரிய ஒரு பொருளாதாரத்தையே ஓபன் செய்துள்ளது. கழுதை தேவையும் விற்பனையும் அதிகரித்து வருவதால்.. கோழிப் பண்ணையைப் போலக் கழுதை பண்ணை அமைக்கவும் கூட பாகிஸ்தானில் ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக விவாதிக்கவே சீன தூதுக்குழுவும் கூட கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் ராணா தன்வீர் உசைனை சந்தித்தது.
கழுதை பண்ணைகளை அமைப்பதன் மூலம் கழுதை பராமரிப்பு, தீவனம் மற்றும் பண்ணை மேலாண்மை போன்ற வேலை வாய்ப்புகள் உருவாகும். இது பாகிஸ்தானில் ஒரு மிகப் பெரிய பொருளாதாரத்தை உருவாக்கும் என்பதில் சந்தகம் இல்லை. அதேநேரம், கழுதைகளை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் ஏழை பாகிஸ்தான் மக்கள் கழுதைகளின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் புதிய கழுதைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications