ஷூவை கூட விட்டுவிட்டு மகள்கள், மனைவியோடு தப்பி ஓடினேன்.. எமிரேட்ஸ் விமான பயணியின் பீதி பேட்டி
துபாய்: ஷூவை அணிய கூட நேரமில்லை என்பதால், வெறும் காலோடு தப்பியோடியதாக துபாய் விமான நிலையத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் விமான விபத்தில் உயிர் தப்பிய தொழிலதிபர் தெரிவித்தார்.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 எண் கொண்ட, போயிங் வகை விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.
துபாய் நேரப்படி நேற்று மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது.

இன்ஜின் வெடித்தது
விமானம் சிறிது தூரம் பைலட் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதன்பிறகு இன்ஜின் வெடித்து பெரும் நெருப்பு வெளிப்பட்டது. புகை மண்டலமாக அந்த இடம் காட்சியளித்தது.

இறங்கியதும் வெடித்தது
கேரளாவை சேர்ந்த சாய் பாஸ்கர் என்ற பயணி நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் எல்லோரும் வெளியேறிய அடுத்த ஒரு நிமிடத்தில் இன்ஜின் வெடித்து தீ கிளம்பியது. நல்ல வேளையாக நாங்கள் தப்பிவிட்டோம். சிலருக்கு புகையால் மூச்சு திணறல் மட்டும் ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.

குடும்பத்தோடு பயணம்
கேரளாவை சேர்ந்த ஷாஜி கொச்சிகுட்டி என்ற தொழிலதிபர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களோடு இதே விமானத்தில் பயணித்தார். அவர் அந்த பயங்கர நிகழ்வை நிருபர்களிடம் தெரிவித்தார்.

வழிகாட்டிய ஊழியர்கள்
"நாங்கள் அதிருஷ்டவசமாகவே உயிரோடு இருக்கிறோம். இதைவிட, வேறு என்ன கடவுளிடம் நாங்கள் கேட்டுவிடப்போகிறோம். விமானம் விபத்துக்குள்ளானதுமே, விமான ஊழியர்கள் எஸ்சிட் கதவுகளை திறந்து விட்டு வெளியேற வழி காட்டினர்." என்கிறார் பீதி அடங்காமல்.
முதலில் மகள்கள்
முதலில் நான் எனது மூன்று மகள்களையும் வெளியே அனுப்பினேன். பிறகு எனது மனைவியை வெளியேற்றினேன். குதிக்கும்போது அவரது முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதன்பிறகு நானும் வெளியே குதித்து தப்பியோட ஆரம்பித்தோம்.

ஷூவைவிட்டு ஓடினேன்
ஷூவை கூட விட்டுவிட்டு தலை தெறிக்க ஓடியதால் எனது கால்களில் ரணம் ஏற்பட்டது. இருப்பினும் விமான நிலையத்திலேயே எங்கள் அனைவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டது. இதனால் தற்போது நலமாக உள்ளோம் என்றார்.

அனுபவ பைலட்
விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய பைலட் இதுவரை 7 ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவக்காரர். மேலும், விமானம் கிளம்பும் முன்பு அனைத்து வகையான பாதுகாப்பு சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். துபாய் சிவில் விமான போக்குவரத்து துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications