"அந்த மனசுதான் சார் கடவுள்!" பூகம்பத்திற்கு நடுவே ஓடி வந்து ஐசியு குழந்தைகளை காத்த துருக்கி நர்ஸ்கள்
துருக்கி நிலநடுக்கத்தில் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி ஒன்று இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
துருக்கி: துருக்கி நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இருப்பினும், அங்கு சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பொதுமக்களால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.
இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் துருக்கி நாட்டில் அன்றைய தினமே மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.5ஆகப் பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம்
முதல் நிலநடுக்கத்திலேயே பல கட்டிடங்கள் சரிந்தன. இதனால் பாதிப்பும் மிக மோசமாக இருந்தது. மேலும், பல நூறு கட்டிடங்கள் பலவீனமடைந்தது. இந்தச் சூழலில் இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படவே கட்டிடங்கள் முழுமையாகச் சரிந்தன.. இதனால் பலரும் ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அந்த இரு நிலநடுக்கங்கள் மட்டுமின்றி, அடுத்த பல மணி நேரத்திற்கு நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இதனால் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் கூட இதன் பாதிப்புகள் இருந்தன.

33 ஆயிரம் பேர் பலி
அங்கு சிரியாவிலும் பல பகுதிகளில் பாதிப்புகள் மிக மோசமாகவே இருந்தது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், துருக்கி நாட்டில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் அவர்களுக்கு உதவ மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளன.. துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000ஐ கடந்துள்ளது.

நெகிழ்ச்சி
துருக்கியில் நேற்று வரை மட்டும் 29,605 பேரும்.. சிரியாவில் 4,500க்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர்.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உரியச் சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் அவ்வப்போது உயிருடன் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள்
சமீபத்தில் தான் பல மணி நேரம் நிலநடுக்க ஈடுபாடுகளில் சிக்கித் தவித்த குழந்தையை மீட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நிலநடுக்கம் சமயத்தில், மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிடாமல் குழந்தைகளைப் பாதுகாத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவான அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் இரண்டு துருக்கி செவிலியர்கள் வெளியே ஓடாமல்.. பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாத்த சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

செவிலியர்கள்
இந்த துருக்கி காசியான்டெப்பில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்படி தங்கள் உயிரைப் பணையம் வைத்து குழந்தைகளைக் காத்த செவிலியர்கள்.. டெவ்லெட் நிஜாம் மற்றும் காஸ்வல் கலிஸ்கன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.. நிலநடுக்கம் ஏற்பட்டதைச் செவிலியர்கள் உணர்ந்தபோது, கட்டிடத்தை விட்டு வெளியேறாமல் அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தைகளைப் பாதுகாத்தனர்.

வீடியோ
அந்த வீடியோவில்.. கட்டிடங்கள் குலுக்க தொடங்கியவுடன் செவிலியர்கள் பதறியடித்துக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைகிறார்கள்... இருவரும் குழந்தைகள் இருக்கும் இன்குபேட்டர்கள் கீழே விழாமல் இருக்க ஸ்டிராங்காக பிடித்துக் கொள்கிறார்கள்.. அவர்கள் எடுத்த இந்த முயற்சி தான் இன்குபேட்டர்கள் கீழே விழாமல் தடுத்துள்ளது. இந்த வீடியோவை துருக்கி அரசியல் தலைவர் ஃபத்மா சாஹின் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாராட்டும் நெட்டிசன்கள்
தங்கள் உயிரைக் கூட பெரிதாக எடுத்துக் கருதாமல்.. இன்குபேட்டர்களில் சிகிச்சை பெற்று வரும் பச்சிளம் குழந்தைகளைக் காக்க.. இந்த செவிலியர்கள் எடுத்த முயற்சியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டித் தள்ளி வருகின்றனர். துருக்கியில் இப்போது நிலநடுக்கம் ஓய்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications