ஆபரேஷன் "சிலந்தி வலை.." அசந்த நேரத்தில் ரஷ்யாவை கதிகலங்க விட்ட உக்ரைன்.. ஓராண்டாக சீக்ரெட் பிளானிங்!
டெல் அவிவ்: யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் இந்த டிரோன் தாக்குதலை எப்படி நடத்தியது.. டிரோன்களை எப்படி அவர்கள் ரஷ்யாவுக்குள் கடத்தினார்கள்.. இந்தத் தாக்குதல் எந்தளவுக்குத் துல்லியமானதாக இருந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 4000 கிமீ வரை ரஷ்யாவில் ஊடுருவிய உக்ரைன் இந்த பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஐந்து ரஷ்ய ராணுவ விமான தளங்களைக் குறிவைத்து இந்த மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மோதலில் இது மிகப் பெரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் ஸ்பைடர் வெப்
ஆபரேஷன் ஸ்பைடர் வெப், அதாவது சிலந்தி வலை என்ற இந்த ஆபரேஷனை உக்ரைன் பக்காவாக திட்டமிட்டு நடத்தியிருக்கிறது. Tu-95, Tu-22 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட உக்ரைன் நகரங்களில் குண்டு வீசப் பயன்படுத்தப்பட்ட 41 விமானங்களை ரஷ்யா இழந்துள்ளன. உக்ரைனிடம் இருந்து இப்படியொரு தாக்குதலை ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதே இந்த அழிவே காட்டுகிறது.
மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ஐந்து ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. இதைத் தீவிரவாத செயல் எனக் குறிப்பிட்டுள்ள ரஷ்யா, இந்தத் தாக்குதலில் போர் விமானங்கள் அழிக்கப்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கிறது.
டிரோன் தாக்குதல்
ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் ஆரம்பித்தது முதலே கடந்த 2022ல் இருந்து உக்ரைன் பல முறை ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஆனாலும் இந்த சிலந்தி வலை ஆபரேஷன் கீழ் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் ரொம்பவே சிக்கலானது. இதற்கு மிக விரிவான திட்டமிடுதல் தேவைப்பட்டு இருக்கிறது. ஓராண்டுக்கும் மேல் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.
இந்த ட்ரோன் தாக்குதலுக்கு மிகவும் சிக்கலான நடவடிக்கைகள் தேவைப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்காக உக்ரைன் முன்கூட்டியே டிரோன்களை முன்கூட்டியே ரஷ்யாவுக்குள் கடத்தியுள்ளது. லாரிகளில் கேபின்கள் மீது மரத்திலான போலியான கூரையை அமைத்து அதற்குக் கீழ் டிரோன்களை கடத்தியுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் சோதனை செய்தபோது தெரியாத அளவுக்கு டிரோன்கள் மேலே மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
லாரிகளில் இருந்த பறந்த டிரோன்கள்
அந்த லாரிகள் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. பிறகு சரியான நேரத்தில் கூரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறக்கப்பட்ட நிலையில், டிரோன்கள் மின்னல் வேகத்தில் போய் எல்லாவற்றையும் தாக்கி அழித்துள்ளது. ரஷ்யா என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் உக்ரைன் தனது தாக்குதலை மொத்தமாக முடித்துவிட்டது.
ரஷ்யா சொல்வது என்ன!
ரஷ்யாவும் கூட இந்த டிரோன்கள் உக்ரைனில் இருந்து ஏவப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. விமான தளங்களுக்கு அருகில் இருந்தே அவை ஏவப்பட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் தாக்கப்பட்ட இர்குட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள பெலாயா விமான தளம் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 4,300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அதேபோல முர்மன்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள ஒலென்யா விமான தளம் எல்லையில் இருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தளவுக்கு உள்ளே இறங்கி பக்காவாக திட்டம் போட்டு ரஷ்யாவைக் கதிகலங்க வைத்துள்ளது உக்ரைன்.












Click it and Unblock the Notifications