சிசேரியனில் ஏற்பட்ட தொற்று! குழந்தை பிறந்த இரண்டே நாட்களில்.. தாய்க்கு கை, கால்கள் பறிபோன கொடூரம்
இளம்பெண் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பின் கை, கால்களை இழந்துள்ளார்.
வாஷிங்டன்: 28 வயதே ஆன இளம்பெண் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கை, கால்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் கர்ப்பமடையும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். அதில் பிரசவ வலி ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் கூறியிருப்பார்கள்.
அதேநேரம் பிரசவ வலி ஏற்படும் போது, சில தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் சிசேரியன் அறுவை சிகிச்சையை நோக்கித் தள்ளுவதாகவும் புகார்கள் ஆங்காங்கே வந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா
இதனிடையே அமெரிக்காவில் 29 வயதான பெண் ஒருவர் சிசேரியன் மூலம் இரண்டாவது குழந்தையைப் பெற்ற நிலையில், அவருக்கு சில நாட்களில் செப்டிக் ஷாக் ஏற்படவே அவர் தனது இரண்டு கைகளையும் கால்களையும் இழந்துள்ளார். கடந்த அக். மாதம் இவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்த நிலையில், அப்போது ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அவரது கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்த 28 வயது தாயார் கிறிஸ்டினா பச்சேகோ தெரிவித்தார்.

பிரசவ வலி
கிறிஸ்டினா பச்சேகோவுக்கு கடந்த அக். மாதம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெக்சாஸில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிசேரியன் ஆப்ரேஷன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அங்கு அவருக்கு அமெலியா என்ற பெண் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அருக்கு சிசேரியன் மூலமே ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் முடிந்த சில நாட்களில் அவர் வீடு திரும்பிவிட்டார். இதுவரை எல்லாமே நன்றாகவே நடந்துள்ளது.

அறிகுறி
ஆனால், அதன் பிறகு இரண்டு நாட்களில் அடுத்தடுத்து பகீர் சம்பவங்கள் நடந்துள்ளன. வீடு திரும்பிய இரு நாட்களில் அவருக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல், வாந்தி ஏற்படத் தொடங்கியுள்ளது. முதலில் அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிசேரியன் ஆப்ரேஷன் செய்தால் வழக்கமாக இதுபோல தான் ஏற்படும் என்று அவர் நினைத்துள்ளார். இதனால் அவர் சாதாரண காய்ச்சல் மருந்தை எடுத்துள்ளார். ஆனால், உடல்நிலை பாதிப்பு தொடரவே அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்த போதிலும், அவரது உடல்நிலை முன்னேறவில்லை.

செப்டிக் ஷாக் என்றால் என்ன
இதையடுத்து அவர் மற்றொரு நவீன வசதி கொண்ட மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு செப்டிக் ஷாக் இருப்பது கண்டறியப்பட்டது.. மிகவும் ஆபத்தான பாதிப்பான இது, நோய்த் தொற்றுக்கு உடல் காட்டும் ரியாக்ஷன் ஆகும். செப்சிஸ் நிலையில் மிகவும் மோசமானது தான் இந்த செப்டிக் ஷாக் ஆகும். அதாவது தொற்று பாதிப்பு எதாவது ஏற்படும்போது, அதற்கு உடல் அதீதமாக எதிர்வினையாற்றும். அதுவே செப்டிக் ஷாக் ஆகும். இதய பிரச்சினைக்கு அடுத்து கர்ப்ப காலத்தில் இந்த செப்டிக் ஷாக் தான் அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது.

அன்று என்ன நடந்தது
இந்த பெண்ணுக்கு சிசேரியன் ஆப்ரேஷன் செய்யும் போது நோய்த் தொற்று ஏற்படவே, அதற்கு உடல் அதீத எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், "அப்போது எனக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக ஞாபகம் இருக்கிறது. என்னால் மூச்சுவிட முடியவில்லை.. என்னால் பார்க்கக் கூட முடியவில்லை.. எனக்கு மெல்ல மயக்கம் வரத் தொடங்கியது. எனது கணவர் பதறிவிட்டார். விட்டுவிடாதே.. நமது குழந்தைகளுக்கு நீ தேவை என்றெல்லாம் அவர் சொன்னார். அதெல்லாம் என்னால் கேட்க முடிந்தது. எனது கை, கால்கள் கறுப்பு நிறத்தில் மாறிவிட்டது. கை, கால்கள் உறைந்து கிடந்தன" என்றும் அவர் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை
அவர் அங்கு மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசமும் கொடுக்கப்பட்டது. அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும் கூட அவரது கைகள் மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் மோசமடைந்துள்ளது. அவர் உயிரைக் காப்பாற்ற கை, கால்களை துண்டிக்கும் அளவுக்குச் சேதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உயிரைக் காக்க கைகள் மற்றும் கால்கள் இரண்டையும் துண்டிக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது மட்டுமின்றி, அடுத்த சில வாரங்களில் அவர் சுமார் 10க்கும் மேற்பட்ட தோல் சார்ந்த ஆப்ரேஷன்களை செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் கை, கால்கள் அகற்றப்பட்ட இடத்தை சுற்றியிருந்த தோல் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

கை கால்கள் இழப்பு
இதனால் அந்த தோலுக்கும் தனியாக ஆப்ரேஷன் செய்துள்ளனர். இதனால் சுமார் இரண்டு மாதங்கள் வரை அவர் மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவர் இந்த மாத தொடக்கத்தில் வீடு திரும்பினார். குழந்தை பிறந்து சுமார் நான்கு மாதங்கள் அவர் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார். இப்போது வீட்டில் இருந்தபடி அவர் தனது இரண்டு வயது மகனையும் மகளையும் கவனித்து வருகிறார். தனது வலிமையை மீட்டெடுக்க அவர் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications