"உலகம் இப்படி தான் அழியும்.." துல்லியமாக கணித்து சொன்ன ஆய்வாளர்கள்.. அப்போ மனித இனமே இருக்காதா?
லண்டன்: இந்த உலகம் பல்வேறு காரணங்களால் இப்போது வேகமாக மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பூமி இப்போது இருப்பதைப் போல நிச்சயம் வரும் காலங்களிலும் இருக்காது. இதற்கிடையே சர்வதேச ஆய்வாளர்கள் பூமி எப்படி அழியும்.. அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
பூமி தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது போலப் பூமி இப்போது இல்லை. அதேபோல வரும் காலங்களிலும் பூமி இதுபோல இருக்காது. இந்த மாற்றங்களால் பூமி நிச்சயம் ஒரு காலம் அழியும் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். எப்படி அழியும் என்பது குறித்தே ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே பூமி எப்படி அழியும் என்பது குறித்து ஆய்வாளர்கள் முன்வைக்கும் 5 ஆப்ஷன்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பூமியைத் தாக்கும் சிறுகோள்கள்
உலகம் எப்படி அழியும் என்று ஆய்வாளர்கள் யோசிக்கும் போது asteroids எனப்படும் சிறுகோள் தாக்குதல் தான் பிரதானமாக இருக்கிறது. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் பூமியில் மோதியதால் தான் டைனோசர்கள் அழிந்தன என்று நம்பப்படுகிறது. அதேபோன்ற ஒரு நிகழ்வு இன்று நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும்.
சிறுகோள் மோதும்போது பெரிய அளவில் ஆற்றல் வெளியேறி அது பேரழிவை ஏற்படுத்தும்.. தீ மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்படும். இந்த மோதலால் விண்வெளியில் தூசு மற்றும் குப்பைகள் கலக்கும். அது சூரிய ஒளியையே கூட மறைத்து நியூக்ளியர் பனிக்காலத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் காலநிலை மாறி, பூமியில் உள்ள உயிரினங்கள் அழியக்கூடும்.
இதுபோன்ற பேரழிவைத் தடுக்கவே நாசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பூமியை நெருங்கும் சிறுகோள்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. சிறுகோள் தாக்கலாம் என்றே ஆய்வாளர்கள் பலரும் கருதுகிறார்கள். முதல் சிறுகோள் தாக்குதல்களில் டைனாசர்கள் மொத்தமாக அழிந்தது போல.. இந்த முறை மனித இனம் அழியும் என எச்சரிக்கிறார்கள்.
சூப்பர் எரிமலை வெடிப்பு
சூப்பர் எரிமலை வெடிப்புகளும் உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இவை சாதாரண எரிமலை வெடிப்புகளைப் போல இல்லாமல், அதிக அளவு எரிமலை குழம்பு, சாம்பல் மற்றும் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. கடைசியாக ஏற்பட்ட சூப்பர் எரிமலை வெடிப்பு சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள டோபா கால்டெராவில் நிகழ்ந்தது. இது சர்வதேச அளவில் ஒரு பெரிய மற்றும் நீண்ட குளிர்காலத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.
இன்று ஒரு சூப்பர் எரிமலை வெடித்தால், மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்படும். எரிமலை சாம்பல் சூரிய ஒளியை மறைத்து வெப்பநிலையைக் குறைக்கும். இதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பஞ்சம் ஏற்படலாம். சூப்பர் எரிமலை வெடிப்புகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்தே இப்போது உலகெங்கும் மிகத் தீவிரமான ஆய்வுகள் நடந்து வருகிறது.
காலநிலை மாற்றம்
மனித செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் பூமியில் உள்ள உயிர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது. பெட்ரோல், டீசல் உட்பட புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் காடுகளை அழிப்பது போன்ற காரணங்களால் உலக வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகுகின்றன, கடல் மட்டம் உயர்கிறது, மேலும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், உலகின் சில பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும். வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எதிர்காலத்தில் சூறாவளி, வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்றவரை அடிக்கடி நிகழும் அபாயம் உள்ளது. இது மனித நாகரிகத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அணு ஆயுதப் போர்
அணு ஆயுத போர் உடனடி அழிவையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவது மட்டுமின்றி, அது நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அணு குண்டு வீசப்படும்போது நகரங்கள் மற்றும் காடுகள் எரிந்து நாசமாகும். அதனால் ஏற்படும் புகை மிக பெரியளவில் திரண்டு சூரிய ஒளியை மறைத்து, உலக வெப்பநிலையைக் குறைக்கும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவு பற்றாக்குறை ஏற்படும். கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்
செயற்கை நுண்ணறிவு
இதைப் பலரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால், சில ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் கூட உலகம் அழியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையின் பல அம்சங்களில் புரட்சியை ஏற்படுத்தினாலும், சில வல்லுநர்கள் ஒரு சூப்பர் இன்டெலிஜென்ட் இயந்திரத்தை உருவாக்கும்போது அது ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டை மீறி மனிதர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அது மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக மாறும். பல வல்லுநர்கள் இதை எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications