"லிமிட்"டை மீறிய தாலிபன்கள்.. அனலில் தகிக்கும் ஆப்கன் பெண்கள்.. அடுத்த குண்டை தூக்கி போட்ட தாலிபன்ஸ்
காபூல்: பெண் குழந்தைகளும், பெண்களும், தாலிபான்கள் விதிக்கப்படும் விதிமுறைகளால் திணறிப்போயுள்ளனர். இப்போது இன்னொரு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள். அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்கவும் அனுமதி அளிக்கவில்லை.

ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூஙகா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை பெண்கள் அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு..
கல்வி உரிமை: பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல, அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில், முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்..
விளையாட்டு: சிறுவர்கள் கேம் சென்டர்களுக்கு செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போகக்கூடாது இப்படியான உத்தரவுகளும் தொடர்கின்றன.. அவ்வளவு ஏன்? தோட்டங்களுக்கு போகக்கூடாது.. புல்வெளிகள் அமைந்துள்ள ஓட்டல்களுக்கு பெண்கள் போகக்கூடாது, பியூட்டி பார்லர்கள் போகக்கூடாது, என்றெல்லாம் தடைகள் தொடர்கின்றன.
இந்த பெண் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதற்காக, உணவில் விஷம் வைக்கும் அளவுக்கு கொடூரம் நடந்தது.. வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தில், சங்சரக் மாவட்டத்தில், 1ம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகளை சேர்ந்த 80 சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்டது.
அடுத்த ஷாக்: இதோ இன்னொரு அதிர்ச்சி வெளியாகி உள்ளது.. புர்கா அணியாமல் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், புதிய அறிவிப்பினை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
பெண்கள் வெளியில் காரில் செல்லும்போதும்கூட, ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும், காரிலேயே சென்றாலும்கூட, கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. முழு உடலையும் மூடாத பெண்களை டாக்ஸியில் அழைத்து சென்றால், அந்த டிரைவர் தலிபான்களால் தாக்கப்படுவார் என்றும், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார்களாம். இந்த உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications