தகதகன்னு ஜொலித்த சில்வர் பார்சல்.. ஆர்வமாய் திறந்த ஆபீசர்ஸ்.. கடைசியில் குப்பென வியர்த்து போய்.. ஐயோ
மெக்சிகோ: விமானங்களில் கூரியர் மூலமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், மெக்சிகோ விமான நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது.. அந்த பார்சலை திறந்து பார்த்து அதிகாரிகள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. அப்படி என்னதான் இருந்தது அந்த பார்சலில்?
சர்வதேச அளவில் கடத்தல் அதிகம் நடைபெறும் பகுதிகளில் மெக்சிகோவும் ஒன்று. மெக்சிகோவிலிருந்து அதிகமான அளவில் போதை பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இதனை பெரும்பாலும் மனிதர்கள்தான் கடத்துகின்றனர். அயன் பட பாணியில் இந்த சம்பவம் நடைபெறும். ஆனால் சுங்க அதிகாரிகள் இதனை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் நின்றபாடில்லை.
இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் மற்ற விமான நிலைய அதிகாரிகள்தான் கண்டுபிடிப்பார்கள். ஆனால் இந்த பொருட்கள் மெக்சிகோவிலிருந்துதான் ஏற்றுமதியாகின்றன. எனவே மெக்சிகோ விமான நிலைய அதிகாரிகள் இந்த கடத்தல் சம்பவங்களுக்கு துணை போகிறார்கள் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவின் குவெரேடாரோ இன்டர்காண்டினென்டல் விமான நிலைய அதிகாரிகள் நேற்று ஒரு பார்சலை கைப்பற்றியிருக்கின்றனர்.
பார்சல்
அட்டைப்பெட்டியில் வந்த இந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்த போதுதான் இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வித்தியாசமாக உருண்டை வடிவில் ஆனால் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ளே இருந்த பொருட்கள் இருந்துள்ளன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து இதனை சோதனை செய்து பார்த்துள்ளனர். அட்டை பெட்டியை பிரித்த போது உள்ளே சில்வர் பேப்பரில் இந்த மர்ம பொருட்கள் சுற்றப்பட்டிருந்திருக்கிறது. சில்வர் பேப்பரை பிரித்து பார்த்த அதிகாரிகளுக்கு முகம் வியர்த்து கொட்டி இருக்கிறது. அதாவது பார்சலில் வந்தது வெடிகுண்டு இல்லை. அது மனித தலையின் மண்டை ஓடுகள்.
மண்டை ஓடுகள்
மொத்தமாக 4 மனித மண்டை ஓடுகள் இந்த அட்டைப்பெட்டியில் வந்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு செல்ல இருந்திருக்கிறது. இதனையடுத்து TO அட்ரசை செக் செய்த அதிகாரிகள், இந்த முகவரி போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதேபோல FROM முகவரியை பரிசோதிக்கையில், மெக்சிகோவின் மேற்கு கடற்கரை மாநிலமான மைக்கோவாகன் பகுதியிலிருந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மாநிலத்தில் சமீபத்திய நாட்களாக தொடர் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பார்சல் குவெரேடாரோ இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
இந்த பார்சலை அனுப்பியவர்கள் அதற்கான நோக்கம் குறித்த மேலதிக தகவல்களை அந்நாட்டு காவல்துறையினர் வெளியிடவில்லை. இவ்வாறு மனித உடல் பாகங்களை விமானம் வழியாக அனுப்புவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறையினரிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த பார்சலுக்கு இவ்வாறான அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பார்சல் தொடர்பான விசாரணையை புலனாய்வு அதிகாரிகள் கையில் எடுத்திருக்கிறார்கள். இதற்கு முன்னரும் இதே போன்று மனிதர்களின் எலும்பு கூடுகள் அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது இதுதான் முதன் முறையா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடத்தல்
உலகம் முழுவதும் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு மனித உடல் பாகங்கள் கடத்தப்படுவது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஆனால் எலும்பு கூடுதல் கடத்தப்படுவது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மாந்திரிகத்திற்காக மட்டுமே மனித மண்டை ஓடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இதுவும் அந்த நோக்கத்திற்காகதான் கடத்தப்படுகிறதா? என்று கேள்வியெழுந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த மண்டை ஓடுகள் யாருடையது என்பது குறித்தும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.