ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளிகள் நடத்தி தமிழர் திருவிழா!
ஹூஸ்டன்(யு.எஸ்) டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளிக் கிளைகளின் சார்பில் திருக்குறள் போட்டி, பொங்கல் மற்றும், உழவர் திருவிழா நடைபெற்றன.
திருக்குறள் போட்டியில் சுமார் 3000 தடவை குறள்கள் ஒப்புவிக்கப்பட்டன. ஆறு கிளைப் பள்ளிகளிலிருந்தும், பங்கேற்ற மாணவர்கள், 3000 டாலர்கள் பரிசுகளை வென்றனர். அனைத்து மாணவர்களுக்கும் டாலர் பரிசுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனவரி14 சனிக்கிழமை பொங்கல் நாளன்று சுகர்லேண்ட் பள்ளிக்கிளையின் சார்பில் பள்ளி வளாகத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
மாணவர்களின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், திரையிசை நடனங்கள், பேச்சு, விநாடிவினா என பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உட்லேண்ட்ஸ் பள்ளிக்கிளையின் சார்பில் சென்ற ஜனவரி 15, ஞாயிறன்று உட்லேண்ட்ஸ் இந்துக் கோயில் வளாகத்தில் பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மேடைக்கு வந்த தொலைக்காட்சி
விழா முழுதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வடிவத்தில் இருந்தது. இன்று ஒரு தகவல், நாடகம், கலைநடனங்கள், விவாத மேடை என தொலைக்காட்சிப் பெட்டியை மேடையில் கொண்டு வந்து விட்டனர்.
பின்னர் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதன்மை இடங்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜனவரி 21 சனிக்கிழமை காலை மேற்கு ஹூஸ்டன் பள்ளியில் பள்ளி வளாகத்தில் கிராமியக் கலை கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, கரும்பு தின்னும் போட்டி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பொங்கல் விழா களைகட்டியது.
வகைவகையான பொங்கல் உணவு பெற்றோர்களால் தயாரித்து வழங்கப்பட்டன. கேட்டி மற்றும் பியர்லேண்ட் தமிழ்ப் பள்ளிகளில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகப் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கூடி கையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அதே சனிக்கிழமை காலை தொடங்கி மாலைவரை பியர்லேண்ட் பள்ளிக் கிளையின் சார்பில் உழவர் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக, ஹூஸ்டன் பெரு நகரத் தமிழ்ப் பள்ளி சார்பில் நிதிதிரட்டுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.