அழையா விருந்தாளியாக நான் எங்குமே போனதில்லை..... விளக்கம் தரும் விஜய் மல்லையா
லண்டன்: இந்திய தூதர் பங்கேற்ற லண்டன் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தாம் அழையா விருந்தாளியாக செல்லவில்லை என்று தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வங்கிகளில் பெற்ற ரூ9,000 கோடி ரூபாய் கடனை செலுத்த முடியாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அவரது பாஸ்போர்ட் மற்றும் முக்கிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
பண மோசடி வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக மும்பை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றிருப்பதால் அவர் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகிறார்.
புத்தக வெளியீட்டு விழா
இதனிடையே சுஹெல் சேத் மற்றும் பத்திரிகையாளர் சன்னி சென் ஆகியோரின் நூல் வெளியீட்டு விழா லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் பள்ளியின் சார்பில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வெளியேறிய இந்திய தூதர்
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பிதழ் பட்டியலில் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெறாத நிலையில் அவர் அழையா விருந்தாளியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சர்ச்சை வெடித்தது. நிகழ்ச்சி தொடங்கியதும் மல்லையா தனது மகளுடன் வந்து அரங்கில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரைப் பார்த்த இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார்.
விளக்கம்
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய் மல்லையா, அழையா விருந்தாளியாக நான் எங்கும் சென்றதில்லை. புத்தகத்தை எழுதியவர் எனது நண்பர். அதனால் அந்த விழாவுக்கு நான் என் மகளுடன் சென்றேன். நான் எப்போதும் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை. செல்லவும் மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
மறுப்பு
ஆனால் இந்த விழாவை நடத்திய விழா ஏற்பாட்டாளர்களான லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், அழைப்பாளர்கள் பட்டியலில் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறைக்கு விளக்கம் அளித்துள்ளது.