AI வரமா? சாபமா! 8000 ஊழியர்கள் நீக்கம்! கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் அவர்களை வேலைக்கு சேர்த்த ஐபிஎம்!
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) பயன்படுத்த தொடங்கிய ஐபிஎம் நிறுவனம் சமீபத்தில் 8,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அதே அளவுக்கான ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி இருந்து. அப்படியெனில் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைகள் பறிபோகாதா? ஏன் மீண்டும் இவ்வளவு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்? உள்ளிட்ட கேள்விகள் பெரும் விவாதங்களாக வெடித்தன.
இதற்கான காரணங்களை, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா 'தி வால் ஸ்ட்ரீட் ஜார்னலுக்கு' அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.

ஐபிஎம் நிறுவனத்தின் திட்டம்
2023ம் ஆண்டு இந்த பணி நீக்கத்தை ஐபிஎம் செய்தது. ஏஐ தொழில்நுட்பத்திற்காக இப்படி ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பும் முறையை இந்த நிறுவனம்தான் தொடங்கி வைத்தது என்று கூட சொல்லலாம். ஐபிஎம் நிறுவனத்தை பார்த்து, பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பின. ஐபிஎம், மனிதவள துறையில் (ஹெச்ஆர்) ஊழியர்களுக்கு பதில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. நிறுவனத்தின் திட்டம் இதுதான்.
செலவுகளை குறைத்த ஏஐ
இதற்காக 'AskHR' என்கிற ஏஐ தொழில்நுட்பத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. விடுமுறை கோரிக்கைகள், சம்பள விவகாரம் மற்றும் ஊழியர்களின் ஆவணங்கள் போன்ற விஷயங்களை AskHR கவனித்துக்கொண்டது. எதிர்பார்த்த அளவுக்கு இது சிறப்பாகவும், துல்லியமாகவும் பணியை கச்சிதமாக முடித்து கொடுத்தது. இதனால் பெரிய அளவுக்கு செலவும் குறைந்தது. வழக்கமாக ஹெர்ஆர் செய்யும் பணிகளில் 94% பணிகளை இது செய்து கொடுத்தது. இதனால் $3.5 பில்லியன் அளவுக்கு பணம் மிச்சமாகியிருக்கிறது.
அப்படியெனில் ஐபிஎம் நிறுவனம் எடுத்த முடிவு சரியானதுதானே! பின்னர் ஏன் புதியதாக மீண்டும் ஊழியர்களை வேலைக்கு எடுத்தது? என்று கேள்வியை பலரும் எழுப்பியிருந்தனர்.
மீண்டும் பணியில் சேர்ப்பு
இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கிருஷ்ணா, "எங்கள் மொத்த வேலைவாய்ப்பு உண்மையில் அதிகரித்துள்ளன. வழக்கமான, திரும்ப திரும்ப செய்யும் வேலைகளை ஏஐ கச்சிதமாக செய்யும். இதை வைத்து மற்ற துறையில் முதலீடு செய்ய நிதியை நம்மால் திரட்ட முடியும். இதுதான் ஏஐ. படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் நேரடி மனித தொடர்பு தேவைப்படும் இடங்களில் இந்த முதலீடுகளை நம்மால் பயன்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.

மனிதர்களுக்கு மாற்றா?
மனிதர்களுக்கு மாற்று ஏஐ கிடையாது. வேலைகளை இது சுலபமாக்கும். ஆனால் இதை வைத்து மட்டுமே தொழில் துறையில் முன்னேறிவிட முடியாது என்பதுதான் அவர் சொன்னதன் சுருக்கம். எனவேதான் மற்ற துறைகளுக்கு அதிக அளவில் ஊழியர்களை ஐபிஎம் பணியில் அமர்த்தியுள்ளது.
நிறுவனங்களின் அனுபவம்
ஐபிஎம் நிறுவனத்தை போல வேறு சில நிறுவனங்களும் இதே சிக்கலை எதிர்கொண்டிருந்தன. 'டியோலிங்கோ' செயலி சாட்பாட்களை அதிக அளவில் நம்பியிருந்ததால் ஆப், பயனாளர்கள் மத்தியில் மதிப்பை இழந்தது. எனவே மீண்டும் ஊழியர்களை நியமிக்க வேண்டிய இடத்திற்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டது.
மனித வளம்
இந்நிறுவனங்களின் அனுபவம் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்துகிறது. அதாவது, எதிர்காலத்தில் மனித படைப்பாற்றல் அதிகம் தேவைப்படும். உதாரணத்திற்கு chatGPT-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது எங்கிருந்து பதிலை எடுக்கிறது? யாரோ ஒரு எழுத்தாளர் ஆன்லைனில் எழுதிய கட்டுரையிலிருந்து தான் தகவல்களை எடுத்து சுருக்கமாக நமக்கு தருகிறது. காலப்போக்கில் எழுத்தாளர்களே இல்லாமல் போனால்? அது எங்கிருந்து தகவல்களை எடுக்கும்? எனவே படைப்பாற்றல் தேவை.
அனுபவ பாடம்
இப்படித்தான் வேலைவாய்ப்பு சூழல் மாறி வருகிறது. எனவே வேகமாக மாறிவரும் வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிப்பதிலும், மறு திறன்களை மேம்படுத்துவதிலும் வணிகங்கள் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஐபிஎம், டியோலிங்கோ போன்ற நிறுவனங்களின் அனுபவம் உணர்த்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications