துண்டு துண்டாக பிரியும் ஈரான்? உச்சம் தொட்ட உள்நாட்டு பிரச்சனை.. அதிர்ச்சியில் அயதுல்லா அலி கமேனி
டெஹ்ரான்: ஈரானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரான் அரசுக்கு எதிராக பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி மற்றும் குர்துகள் பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் ஈரானில் தற்போதைய ஆட்சி கவிழ்ந்தால் அந்த நாடு பல துண்டுகளாக பிரியும் வாய்ப்புள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் குழப்பம் ஏற்படும்போதெல்லாம் அந்த நாடு பல துண்டுகளாக பிரியும் அபாயம் தொற்றி கொள்ளும். கடந்த ஆண்டு ஈரான் - இஸ்ரேல் மோதல் ஏற்பட்டது. இஸ்ரேலை, ஈரான் தாக்கியது. பதிலுக்கு ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. அப்போதே நாட்டில் உள்நாட்டு பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

இருப்பினும் தற்போது ஈரானில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் உள்நாட்டு கரன்சியான ரியாலின் மதிப்பு உச்சமடைந்துள்ளது.
ஈரானில் பெரும் குழப்பம்
இதனால் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபமான மக்கள் கடந்த மாதம் 28 ம் தேதி முதல் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்று வரை போராட்டம் நிற்கவில்லை. நாளுக்கு நாள் போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
பட்டத்து இளவரசர் ஆதரவு
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 62 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரானை 1979ல் ஆட்சி செய்த முகமது ரெசா பஹ்லவி மன்னரின் வாரிசான பட்டத்துக்கு இளவரசர் ரெசா பஹ்லவி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
துண்டு துண்டாகும் அபாயம்
இவர் அமெரிக்காவின் ஆதரவாளராக உள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ரெசா பஹ்லவி, டிரம்ப் உடனடியாக ஈரான் விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க ஈரானின் மேற்கு பகுதியில் வசிக்கும் குர்துகளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இது ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி நாடு பல துண்டுகளாக பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அயதுல்லா அலி கமேனி பதவி விலகினால் மீண்டும் அங்கு மன்னராட்சி வருமா? அமெரிக்காவில் இருந்து பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி அமெரிக்காவின் உதவியுடன் ஈரானில் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது குர்து உள்பட பல இனக்குழுவினர் நாட்டை துண்டு துண்டாக பிரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
இனக்குழுக்கள் அதிகம்
ஈரானை எடுத்து கொண்டால் 2023ம் ஆண்டின் நிலவரப்படி மொத்தம் மக்கள்தொகை 8.76 கோடியாகும். இதில் 99.4 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அதிலும் 90 முதல் 95 சதவீதம் பேர் ஷியா இஸ்லாமியர்கள். 5-10 சதவீதம் பேர் சன்னி இஸ்லாமியர்கள். இதனால் ஈரான் ஷியா இஸ்லாமியர்கள் நாடாக உள்ளது. அதுமட்டுமின்றி ஈரானில் ஷியா - சன்னி இஸ்லாமியர்கள் இடையே பிரச்சனை உள்ளது.
ஈரானில் வாழும் சன்னி இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் துர்க்மென்கள், அரேபியர்கள், பலூச்சிகள், குர்துகள் ஆவர். துர்க்மென்கள்ஈரானின் வடகிழக்கிலும், அரேபியர்கள் தென்மேற்கிலும், பலூச்சிகள் தென்கிழக்கிலும், குர்துகள் வடமேற்கு மாகாணங்களிலும் வாழ்கின்றனர். இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களும் அடங்குவர். அகதிகளும் ஷியா - சன்னி என பிரித்து அறியப்படுகின்றனர்.
பர்ஷியர்கள்
ஈரானில் மத அடிப்படையில் இஸ்லாமியர்கள் ஒன்றாக இருந்தாலும் கூட இன அடிப்படையில் பிரிந்து உள்ளனர். அங்கு மத பிரிவுகளை விட இனம் என்ற அடிப்படையில் மக்கள் ஒன்றாக இணைகின்றனர். அதன்படி பார்த்தால் நாட்டின் மிகப் பெரிய இனக்குழுவாக பர்ஷியர்கள் (பாரசீகர்கள்) உள்ளனர்.
ஈரானின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 61 சதவீதமாகும். நாட்டின் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இவர்கள் வசிக்கின்றனர். இந்தோ-ஆரிய இனத்தை சேர்ந்த இவர்கள் பாரசீக மொழி பேசுகின்றனர்.
அசெரிகள்
இவர்களுக்கு அடுத்தப்படியாக அசெரிகள் (அசர்பைஜானிகள்) ஈரானின் இரண்டாவது பெரிய மக்கள்தொகையாகும். நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 1.75 கோடி பேர் இவர்கள் தான். இவர்கள் வாழும் பகுதி, ஒரு காலத்தில் பாரசீகப் பேரரசின் அங்கமாக இருந்த இன்றைய அசர்பைஜான் நாட்டுக்கு அருகே உள்ளது.
இவர்கள் ஷியா முஸ்லிம்கள். ஈரான் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும் ஓர் அசெரி தான். இவர் 32 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறார்.
குர்துகள்
ஈரானின் 3வது பெரிய இனக்குழு குர்துகள். இவர்கள் ஒரு கோடி என்ற அளவில் உள்ளனர். உலகளவில் மொத்த குர்து மக்கள்தொகை 4 கோடியாகும். இதில் ஒருகோடி பேர் ஈரானில் உள்ளனர். இதுதவிர தென்கிழக்கு துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் வசித்து வருகின்றனர். ஈரானை எடுத்து கொண்டால் இவர்கள்கெர்மன்ஷா, இலாம் மாகாணங்களில் குர்துகள் பெரும்பான்மையாக உள்ளனர்.
வடகிழக்கில் துர்க்மெனிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு குராசான் பகுதிகளிலும் இவர்கள் பரவலாக உள்ளனர். அதேபோல் லூர் மக்கள் குர்துகளின் ஒரு துணை பிரிவாகும். இவர்கள் 55 லட்சம் பேர் உள்ளனர். லூரேஸ்தான், போயேர்-அஹ்மத் மற்றும் பக்திபாரியா மாகாணங்களில் இவர்கள் உள்ளனர்.
பலூச்சி - பழங்குடியினர்
மேலும் ஈரானின் தென்கிழக்கு பகுதிகளில் வாழும் பலூச்சி சமூகம், வரலாற்று ரீதியாக நாடற்றவர்கள். இந்த பழங்குடி இனத்தவர் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பரவியுள்ளனர். மொத்த பலூச்சி மக்கள் தொகை 1.50 கோடியாக உள்ளது.
உலகளவில் பலூச் மக்கள் 20 சதவீதம் பேர் ஈரானில் உள்ளனர். இவர்கள் மேற்கு ஈரானின், ஈரானிய குர்திஸ்தான் மற்றும் கெர்மன்ஷா பகுதிகளில் வாழ்ந்தனர். பலூச்சி மொழி குர்திஷ் மொழியுடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது.
அரேபியர்கள் - துர்க்மென்கள்
அதேபோல் துருக்கிய நாடோடியான ப்ரோட்டோ-காகேசியன் பழங்குடியினர் ஈரானில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் துருக்கி நாட்டுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள். அதேபோல் பர்ஷியர், அசெரி, பலூச்சி, குர்து இனத்தவர் தவிர, அரேபியர்களும் ஈரானில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.
இவர்களின் மக்கள் தொகை சுமார் 22 லட்சமாக உள்ளது. இவர்களில் 15 லட்சம் பேர் பாரசீக வளைகுடாவின் கடற்கரையில், ஈராக் எல்லையை ஒட்டிய குசெஸ்தான் மாகாணத்தில் வசிக்கின்றனர்.அதேபோல் துர்க்மெனிஸ்தான் எல்லையோர ஈரானியப் பகுதிகளில் சுமார் 15 லட்சம துர்க்மென்கள் வாழ்கின்றனர். இவர்கள் கோலேஸ்தான், குராசான்-ரசாவி, வடக்கு குராசான் மாகாணங்களில் குடியேறியுள்ளனர். இப்படி ஈரானில் பல இனக்குழுவினர் வசித்து வருகின்றனர்.
குர்துகள் போர்க்கொடி
அதுமட்டுமின்றி ஈரானில் பர்ஷிய மற்றும் அசெரி மக்களை விட குர்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட அவர்கள் தொடர்ந்து தனிநாடு கோரி வருகின்றனர். இதனால் பல குர்து தலைவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அரேபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு குர்துகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் ஈரானை எடுத்து கொண்டால் குர்து அமைப்பினர் பிரிவினைவாதிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின்போது குர்துகளுக்கு எதிராக படுகொலை சம்பவங்கள் அரங்கறேின. பெரிய அளவில் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். அதனை இன்றைய மக்களும் மறக்கவில்லை. தற்போதைய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு எதிராக குர்துகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தனி நாடாக பிரியும் அபாயம்
தற்போது உள்நாட்டு பிரச்சனை நடந்து வருகிறது. இந்த வேளையில் அயதுல்லா அலி கமேனி பதவியில் இருந்து இறக்கப்படும் பட்சத்தில் குர்து தனி நாடு கோரிக்கையை முன்னெடுக்கலாம். இதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கலாம். குர்துகளை பார்த்து ஈரானில் உள்ள பிற இனக்குழுவினரும் தனி நாடு கோரலாம். இதனால் தான் தற்போது நடக்கும் பிரச்சனை ஈரானை தனித்தனி நாடாக்கும் அபாயம் ஏற்படுத்தி உள்ளதால் நிபுணர்கள் கூறுகின்றனர். பிரிவினைவாத சக்திகளாக குர்துகள் முதலில் பார்க்கப்படுவதற்கு இதுவே பிரதான காரணம்.
-
Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
சவுதிக்கு வார்னிங்! மருந்து மூல பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலிருந்து வெளியேறுங்கள் - ஈரான் -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா?












Click it and Unblock the Notifications