இஸ்ரேல் மட்டுமில்லை.. உங்களையும் சும்மா விடமாட்டோம்! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சை மிரட்டிய ஈரான்!
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் பயங்கர மோதல் நடந்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்து. இந்நிலையில் தான் ஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தடுக்க நினைத்தால் உங்களையும் தாக்குவோம் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது போர் பதற்றத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் சூழலை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் ராணுவ தளம், அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டு மையம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இதில் ராணுவ தளம், யுரேனியம் செறிவூட்டும் மையம் சேதமாகி உள்ளது. அதேபோல் ராணுவ தளபதிகள், படைப்பிரிவின் தலைவர்கள், அணுசக்தி திட்டத்தில் பணியாற்றி விஞ்ஞானிகள் இறந்துள்ளனர்.
இதையடுத்து நேற்று ஈரான், ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. அதன்பிறகு இன்று ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்டு வருகிறது. 3 கட்டங்களாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் கடும் கோபமடைந்துள்ளது. ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்க உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் சார்பில், ‛‛ஈரான் மீதான நேற்றைய தாக்குதல் வெறும் தொடக்கம் தான். இன்னும் அதிகப்படியான தாக்குதல் இனி தான் நடக்கும்'' என்று தெரிவித்துள்ளது. இதனால் போர் சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையே தான் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவும் - இஸ்ரேலும் நல்ல நண்பர்கள். அதேபோல் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுடன் இஸ்ரேல் நல்ல உறவில் இருக்கிறது. மேலும் இந்த 3 நாடுகளும் கிறிஸ்தவ நாடுகளாகும். இஸ்ரேல் யூத நாடாகும். இதனால் தொடக்கம் முதலே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன.
இதனால் இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்க உதவினாலோ அல்லது இஸ்ரேலுக்கு உதவி செய்தாலோ உங்களையும் தாக்குவோம் என்று ஈரான் மிரட்டி உள்ளது. இதுதொடர்பாக ஈரான் சார்பி்ல், ‛‛ இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை தடுக்க நினைத்தால் இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ தளம் மற்றும் கடற்படை தளங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications