சாக பயமாக இருக்கு: ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள அமெரிக்கர் பெற்றோருக்கு கடிதம்
வாஷிங்டன்: மரணிக்க பயமாக உள்ளது, ஐ லவ் யூ என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள அமெரிக்கர் பீட்டர் காஸ்ஸிக் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளர்களான ஜேம்ஸ் ஃபோலி, ஸ்டீவன் சட்லாப், இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை தலையை வெட்டி கொலை செய்து வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஆலன் ஹென்னிங் என்பவரின் தலையை துண்டித்து கொன்று அந்த வீடியோவை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். வீடியோவின் இறுதியில் தங்கள் பிடியில் உள்ள அமெரிக்கரான பீட்டர் காஸ்ஸிக்(26) என்பவரை தலையை துண்டித்து கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த வட அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாநிலத்தைச் சேர்ந்த பீட்டரின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தங்கள் மகனை விட்டுவிடுமாறு அவர்கள் தீவிரவாதிகளிடம் மன்றாடியுள்ளனர். அந்த வீடியோவில் பீட்டரின் தாய் தலையில் முக்காடு போட்டிருந்தார். மேலும் தனது மகன் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பிறகு இஸ்லாத்திற்கு மாறி அப்துல் ரஹ்மான் என்று பெயர் மாற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் பீட்டர் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மரணம் அடைய பயமாக உள்ளது. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். என் தற்போதைய நிலையை நினைத்து எனக்கு கோபம் இல்லை. ஐ லவ் யூ என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க ராணுவ வீரராக சென்ற பீட்டர் பின்னர் போரில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு அமைப்பை துவங்கினார். அந்த அமைப்பின் மூலமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிழக்கு சிரியாவில் உள்ள தேர் எஸ்ஸோருக்கு செல்கையில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.