பேசி தீர்ப்போம்.. போர் மூண்டால் அதை கட்டுப்படுத்துவது என் கையிலோ, மோடி கையிலோ இல்லை- இம்ரான்கான்
Recommended Video
இஸ்லாமாபாத்: எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்போம் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நிலைமை உச்சக் கட்டத்தை எட்டினால் என் கையிலோ அல்லது மோடி கையிலோ ஒன்றும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த இரு தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியில் இந்திய போர் விமானங்கள் ஈடுபட்டன.
அபிநந்தன்
அப்போது நடைபெற்ற சண்டையின்போது பாகிஸ்தான் போர் விமானம் சுட்டதில் இந்தியாவின் மிக் ரக போர் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. இதையடுத்து அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது. இதை இந்தியா வெளியுறவு துறை செயலாளரே ஒப்புக் கொண்டுள்ளார். அபிநந்தனை மீட்பது தொடர்பாக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாட்டுக்குள் வருவோம்
இந்த நிலையில் இந்தியாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் நீங்கள் எங்கள் நாட்டில் ஊடுருவினால் நாங்கள் உங்கள் நாட்டுக்குள் வருவோம்.
|
உச்சக்கட்டம்
இந்தியாவின் இரு மிக் ரக விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். உங்களிடம் இருக்கும் ஆயுதங்களையும் எங்களிடம் இருக்கும் ஆயுதங்களையும் வைத்து தவறாகவே கணக்கு போட முடியாது. நிலைமை தீவிரமடைந்து உச்சக்கட்டத்தை எட்டினால் அது என் கையிலோ அல்லது மோடி கையிலோ இருக்காது.
தீர்த்துக் கொள்ளலாம்
புல்வாமா தாக்குதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட வலியை புரிந்து கொள்கிறோம். அது குறித்து விசாரணை நடத்த தயாராக உள்ளோம். நாம் இருவரும் உட்கார்ந்து பேசி இந்தப் பிரச்சினையை தீர்த்து கொள்வோம் என்றார் இம்ரான் கான்.