லாஸ் ஏஞ்சல்ஸில் கொத்தாக பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குவியல்.. போலீஸ் தீவிர விசாரணை
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ஆடம்பர வீடு ஒன்றில் இருந்து ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற நகரான லாஸ் ஏஞ்சல்ஸ். இந்நகரின் ஹோல்ம்பி ஹில்ஸ் என்ற பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை நடைபெறுவதாக, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

துப்பாக்கி மட்டுமல்லாமல் சட்டவிரோத வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து புகார் கூறப்பட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் அதிகமிருந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.
பின்னர் சட்டவிரோத ஆயுதங்கள் விற்கப்படுவதாக கூறப்பட்ட ஆடம்பர வீட்டை அதிரடியாக சுற்றிவளைத்த போலீஸார், முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் ஆயுத உற்பத்தி உபகரணங்கள், கருவிகளை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த துப்பாக்கிகளையும், ஆயுத உற்பத்தி உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சந்தேகப்படும்படியான ஒரு நபரையும் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு இதே போல ஒரு வீட்டில் இருந்து 1,200 துப்பாக்கிகளும், 2 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications