நைஜீரிய மசூதி, ஹோட்டலில் பயங்கர குண்டுவெடிப்பு.. போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதலில் 51 பேர் பலி..
நைஜீரியா: மத்திய நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நகரில் மசூதி மற்றும் உணவு விடுதியில் நிகழ்ந்த 2 பயங்கரக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
ஞாயிறன்று (நேற்று) இரவு பெண் தீவிரவாதி ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் போட்ஸ்கம் நகர சர்ச்சில் 5 பேர் பலியான சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் நேற்று தீவிரவாதிகள் நைஜீரிய வட-கிழக்கு கிராமங்களில் நடத்திய தாக்குதல்களில் 9 பேர் பலியான நிலையில், 32 சர்ச்கள் தீக்கிரையாகின. இச்சம்பவத்தின் போது ராணுவம் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. இஸ்லாமிய போகோஹராம் அமைப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் மட்டும் போகோஹராம் தீவிரவாத தாக்குதலுக்கு 300 பேர் பலியாகியுள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க கிளையாக போகோஹராம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னை அறிவித்துக் கொண்டது.
இந்நிலையில் மசூதி மற்றும் உணவு விடுதித் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டு மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications