கடந்த ஆண்டு குண்டுவெடிப்புடன் நடந்த பாஸ்டன் மாரதான் அமைதியாக நடந்தது
பாஸ்டன்: கடந்த ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததையும் பொருபடுத்தாது இந்த ஆண்டு பாஸ்டன் மாரதான் போட்டியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்டன் நகரில் நடந்த மாரதான் போட்டியில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களில் சிலர் தங்களது உடம்பில் கடந்த ஆண்டு மாரத்தானின் போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களை எழுதி இருந்தனர்.
கடந்த ஆண்டு பாஸ்டன் நகரில் நடந்த மாரதான் போட்டி நிறைவடையும் இடத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 260க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போட்டி நடந்த இடம் அகோரமாக காட்சியளித்தது.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கெபில்ஜிகி என்ற 38 வயது அமெரிக்க குடிமகன் வெற்றி பெற்றார். அவர் தனது உடம்பில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் பெயர்களை எழுதி இருந்தார்.
மேலும் பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த ரீட்டா ஜெப்டூ வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்பை பொருட்படுத்தாது பலர் இந்த ஆண்டு மாரதான் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு ஆளில்லாமல் கிடந்த சில பைகளைத் தவிர வெடிகுண்டு அச்சுறுத்தல் எதுவும் இல்லை.