துருக்கியில் 1 லட்சம் பேரை விழுங்கிய பூமி.. 1900 முதல் கோரமுகம் காட்டும் நிலநடுக்கம்.. ஷாக் தகவல்
அங்காரா: துருக்கியில் நேற்று 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில பல ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் உலக நாடுகள் உதவிகளுடன் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் துருக்கியில் கடந்த 123 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேரை நிலநடுக்கம் மூலம் பூமி காவு வாங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கி நாட்டின் காசியான்டெப் பகுதி உள்ளது. இந்த பகுதி துருக்கி- சிரியாவின் எல்லையாக உள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் இந்த பகுதியில் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 5 மணிக்கு 7.8 ரிக்டரிலும், மாலையில் 2வதாக 7.5 ரிக்டரிலும், அதன்பிறகு 3வதாக ரிக்டரில் 6 என்ற அளவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

சீட்டு கட்டுகளாக சரிந்த கட்டடங்கள்
பெரிய பெரிய கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் கண்இமைக்கும் நொடியில் சீட்டுக்கட்டுக்களாக சரிந்தன. இதில் ஏராளமான மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் காசியான்டெப் மற்றும் கஹ்ராமன்மாராஸ் பகுதிகளில் ஏராளமான வீடுகள் தரைமட்டமான நிலையில் கடும் குளிரில் பொதுமக்கள் வெட்டவெளியில் வசிக்க தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமாகி உள்ளன. சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா நகரங்களும் ஏராளாமன கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன.

80 ஆண்டுகளில் இல்லாத...
இந்த நிலநடுக்கத்தால் சிரியாவை விட துருக்கி தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. காசியான்டெப் மற்றும் கஹ்ராமன்மாராஸ் உள்பட 10 முக்கிய நகரங்கள் சீர்குலைந்துள்ளன. ஹடே விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் கடுமையாக தேசமாகி உள்ளன. துருக்கி நாட்டுக்கு நிலநடுக்கமும், உயிர் பலிகளும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட தற்போதைய நிலநடுக்கம் என்பது கடந்த 80 ஆண்டுகளில் மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் உயிர் பலி என்பது இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் நிலப்பரப்பு என்பது நிலநடுக்கத்துக்கு அதிக வாய்ப்புள்ள பகுதியாக அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

பலி 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு
இந்நிலையில் தான் துருக்கி நாட்டின் அகோர முகம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது 1939 ம்ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் சக்திவாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. 1939 டிசம்பரில் துருக்கியின் கிழக்கு நகரான எர்ஜின்கன் நகரில் 8.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தில் 20 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பலியான நிலையில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 720 கட்டடங்கள் சேதமாகின. நேற்றைய நிலநடுக்கம் இதனை விட சக்திவாய்ந்தது என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை என்பது 20 ஆயிரத்தை தாண்டலாம் என அஞ்சப்படுகிறது.

1 லட்சம் பேர் வரை பலி
மேலும், கடந்த 1939 முதல் 1999 முதல் 5 பெரிய நிலநடுக்கங்களை துருக்கி சந்தித்துள்ளது. 1999 ஆகஸ்ட் மாதம் இஸ்மித்தில் 7.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரம் பேர் இறந்தனர். 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் இடிந்தன. அதன்பிறகு அடுத்த மாதம் 7.2 என்ற ரிக்டரில் டஸ் மற்றும் அதன்சுற்றுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 845 பேர் இறந்தனர். கடந்த 1900 முதல் மொத்தம் 76 நிலநடுக்கங்கள் உயிர் பலி வாங்கி உள்ளன. அதன்படி கடந்த 123 ஆண்டுகளில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது ஏறக்குறைய ஒரு லட்சம் கருதப்படுகிறது. குறிப்பாக 1939 முதல் 1999 காலக்கட்டத்தில் தான் உயிரிழப்புகள் அதிகம் நடந்தன. இந்த நிலநடுக்கத்தால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் துருக்கி நாடு 25 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது.

45 நாடுகள் வரை உதவி
இந்நிலையில் தான் நேற்றைய நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா உள்பட உலக நாடுகள் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்ட தொடங்கி உள்ளன. மீட்பு படையினர், மருத்துவ குழுவினர் மற்றும் உணவு, மருந்து பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். தற்போதைய சூழலில் 45 நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்ட தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications