எல்லைக் கோட்டை மாற்ற இந்தியா ஒரு போதும் முயற்சிக்கவில்லை.. சீனாவிடம் அழுத்திச் சொன்ன ஜெய்சங்கர்
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டத்தில், வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலையை மாற்ற இந்தியப் படைகள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த ஒரு வாரமாக சந்தித்து நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வந்தனர். அண்மையில் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து பேசினர். இந்தியா தரப்பில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் சீன பாதுகாப்புத்துறை அமைச்சருடன் எல்லை பிரச்சனை தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார்
இந்த நிலையில் இன்று மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசினர், இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்ர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

பதற்றத்தை தணிக்க
இந்த கூட்டத்திற்கு பின்னர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்கள். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையிலான இந்த பேச்சுவார்த்தை இரவு 9 மணிக்குத் தொடங்கி, கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து, 11 மணியளவில் முடிவடைந்தது.

ஒரு போதும் அப்படி செய்யவில்லை
இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலையை மாற்ற இந்தியப் படைகள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்சங்கர் பதில்
முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆகியோர் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிடம் சமாதானத்தை மீட்டெடுப்பதில் சீனா உறுதியளிக்காவிட்டால், லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் வழக்கமான நிலை இருக்க முடியாது என்று ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியிருக்ககூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன ஊடகம் எச்சரிக்கை
இதனிடையே சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' இன்று ஒரு செய்தி வெளியிட்டது. அதில் "நிபுணர்களின் கூற்றுப்படி ஜெய்சங்கருக்கும் சீன வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம் . கூட்டம் ஒரு நேர்மறையான முடிவை எட்டத் தவறினால், அல்லது இரு தரப்பினரும் படைவிலகல் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், சீனாவும் இந்தியாவும் நெருக்கடியை சமாதானமாக தீர்க்க வாய்ப்பில்லை என்பதற்கான ஆபத்தான சமிக்ஞையாக இருக்கலாம்" என்று தெரிவித்துளளார்கள் என கூறியுள்ளது.

வெளியேற சீனா மறுப்பு
லடாக்கில் பாங்காங் திசே ஏரி பகுதியில் இந்தியா, சீன ராணுவத்திற்கு இணையாக படைகளை குவித்து ஆக்கிரிமிப்பில் இருந்து வெளியேற்ற முயற்சித்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சீனா தான் ஆக்கிமித்த பகுதிகளை தன்னுடையது என்று ரோந்து சென்று வருகிறது. படைகளை வெளியேற்ற முடியாது என்றும் மறுத்துவிட்டது. இதனால் தான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications