டிரம்பை எதிர்த்த மோடி! இந்தியா - பாக் மோதலை அமெரிக்கா நிறுத்தவில்லை.. தொலைபேசி உரையாடலில் அதிரடி
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் 35 நிமிடங்கள் வரை தொலைபேசியில் உரையாடினார். அப்போது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்தியா எந்த நாட்டையும் மத்தியஸ்தம் செய்ய அழைக்கவில்லை. அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து விவாதிக்கவில்லை என்று அதிரடியாக கூறினார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக கூறிய நிலையில் அப்படி எதுவும் நீங்கள் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் சண்டையை நிறுத்த நம்மிடம் கெஞ்சியது.

இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால், டொனால்ட் டிரம்போ அமெரிக்கா தலையிட்டு தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறினார். மோதலை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா உடனான வர்த்தகத்தை மறந்துவிட வேண்டும் என்று மிரட்டியதாகவும், இதனால் மோதல் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனை நம் நாடு முற்றிலுமாக மறுத்தது. அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் மோதல் முடிவுக்கு வந்ததாக விளக்கம் அளித்தது. ஆனால் டிரம்ப் கேட்கவில்லை. பாகிஸ்தான் - இந்தியா மோதலை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் இன்று பேசி உள்ளனர். கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டின்போது மோடி - டிரம்ப் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே டிரம்ப் புறப்பட்டு சென்றார். இதனால் இருவரும் இன்று தொலைபேசியில் பேசினர். சுமார் 35 நிமிடங்கள் இருவரும் உரையாடினர்.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்னொரு நாட்டை மத்தியஸ்தம் செய்ய ஒருபோதும் அழைத்தது இல்லை. இனியும் அழைக்கமாட்டோம். என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை பிரதமர் மோடி ஏற்காததோடு, அந்த விஷயத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று டிரம்பிடம் நேரடியாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ‛‛பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து செயல்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை என்து துல்லியமானது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கையில் எடுத்தால் அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும். இந்த விஷயத்தில் இந்தியாவில் அரசியல் பாகுபாடுகளை கடந்து ஒருமித்த கருத்து நிலவுகிறது.
ஏனென்றால் பயங்கரவாதத்தை இந்தியா மறைமுக போராக கருதவில்லை. முழு அளவிலான போராக கருதுகிறது. இன்னும் கூட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை முடியவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து நடத்தப்படும் ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்தியாவிடம் இருந்து வலுவான பதிலடியை அந்த நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications