உக்ரைன் விவகாரத்தில் ”எங்கள் கூட்டாளி” இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம் - ரஷ்ய அதிபர் புடின்!
அஸ்டனா: உக்ரைன் விவகாரத்தில் எங்களின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 234வது நாளை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள், பேச்சுவார்த்தைகள் மூலம் ஏராளமான முயற்சிகள் மேற்கொண்டன.
ஆனால் அந்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான இந்தப் போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இருநாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் போரால் சர்வதேச அளவில் விநியோக சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குண்டு மழை.. பாதுகாப்பாக இருங்கள்.. உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் ஹை அலர்ட்!
4 நகரங்கள் இணைப்பு
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோல் போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு அதிகரிப்பு
இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு மீண்டும் ஒரு உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.
ரஷ்ய அதிபர் புடின் பயணம்
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புடின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்.
இந்தியா பற்றி புடின்
இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என சீனா, இந்தியா தொடர்ந்து கூறி வருகின்றன. அவர்களின் நிலைப்பாடு எங்களுக்கு தெரிகிறது. இந்தியாவும் சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்தார்.
மோடி வலியுறுத்தல்
அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல. நான் உங்களிடம் தொலைபேசி அழைப்பின்போது பல முறை இதைப் பேசி இருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை உலகை ஒன்றாக வைத்திருக்கும் என்று வலியுறுத்தினார். உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியில் மற்றும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ரஷ்யா மற்றும் உக்ரைனை இந்தியா தொடந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.