நள்ளிரவில் வந்த அறிவிப்பு.. "வங்கதேசத்திற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்.." மத்திய அரசு பரபர
டாக்கா: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் இப்போது வரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது..
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கே சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகவே இந்த போராட்டங்கள் முதலில் வெடித்தன.

இட ஒதுக்கீட்டைக் குறைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அங்கே போராட்டம் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், திடீரென நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
வங்கதேசம்: இதனால் வங்கதேசத்தில் பல இடங்களில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அங்கே மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே வன்முறையாக மாறியது. இதில் இதுவரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த அங்கு போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பெரியளவில் பலன் இல்லை.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வந்த போதிலும், இப்போது அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுவே அங்கே இப்போது வன்முறைக்குக் காரணமாக இருக்கிறது.
ஊரடங்கு: போராட்டங்கள் கையை மீறிச் செல்லும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க நேற்றிரவு முதல் அங்கே ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கே இந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க போலீசார் இதுபோல மொத்தமாக ஊரடங்கை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.
வெளியுறவுத் துறை அமைச்சகம்: இதற்கிடையே இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே வங்கதேசத்தில் இருப்போர் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது அங்கே இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்துக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தற்போது வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.. எதாவது அவசரம் என்றால் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டாக்காவில் உள்ள இந்தியர்கள் +8801958383679, +8801958383680, +8801937400591 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications