ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி: மோடி
பிஷ்கெக்: ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளது.
ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான் ஆகிய 6 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் சனிக்கிழமை நள்ளிரவு கிர்கிஸ்தான் வந்தார். பிஷ்கெக் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று அவர் கிர்கிஸ்தான் அதிபர் அல்மாஸ்பெக் அதம்பயேவை சந்தித்து பேசினார். அப்போது பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு அளிப்பது உள்பட 4 ஒப்பந்தங்களில் மோடியும், அதம்பயேவும் கையெழுத்திட்டனர்.
அதன் பிறகு மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சவாலான நேரத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பான சூழலை இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் விரும்புகிறது. எல்லைகளைத் தாண்டி அச்சுறுத்தும் தீவிரவாதம் குறித்தும் நாங்கள் பேசினோம். இந்த பயணத்தின் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஆண்டுதோறும் இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ராணுவ வீரர்கள் சேர்ந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருநாட்டு தேர்தல் ஆணையங்கள் ஒத்துழைப்பு அளிப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றார்.