ஷேக் ஹசீனாவை உடனே அனுப்புங்க.. மீண்டும் மீண்டும் இந்தியா தப்பு செய்தால்.. வங்கதேசம் புது ‛வார்னிங்’
டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக இந்தியா நிற்க கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் இந்தியா அவதூறு பரப்பக்கூடாது என்று நம் நாட்டுக்கு வங்கதேசத்தில் இருந்து புதிய ‛வார்னிங்' வந்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார். கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் தான். அங்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாகி ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து தான் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தற்காலிகமாக அடைக்கலம் அடைந்துள்ளார்.
தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசத்துக்கு இந்தியா அனுப்பி வைக்க வேண்டும். ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அடுத்தடுத்து கோரிக்கைகள் வருகின்றன.
இந்நிலையில் தான் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி - ஷேக் ஹசீனாவுக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தொழில்துறை அமைச்சருமான அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்தியாவும், வங்காளதேசமும் சிறந்த அண்டை நாடுகளாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம் உள்ளது. எங்களின் கட்சியும் இந்தியாவுடன் நட்புறவை தான் விரும்புகிறது. இந்தியா - வங்கதேசத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூட இருநாடுகளும் நட்பு கொள்ளாமல் இருக்க முடியாது. பரஸ்பர மரியாதை, இருதரப்பு இடையேயான அமைதி, பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இருநாடுகளின் பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்றை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நம்மால் அண்டை நாட்டை ஒருபோதும் மாற்ற முடியாது இல்லையா?
இந்த வேளையில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஷேக் ஹசீனாவாக இந்தியா விடுவிக்க வேண்டும். அதேபோல் ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய மாணவர்களின் போராட்டம் பற்றி தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும். வங்கதேசத்தில் முக்கிய தலைவர்களை சிறைப்படுத்தியது, வீட்டு காவலில் வைத்து சித்ரவதை செய்தது உள்ளிட்டவற்றை ஷேக் ஹசீனா செய்தார். அதுமட்டுமின்றி மோசடி செய்து தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றார்.

நாடு முழுவதும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் இந்தியா -வங்கதேசம் இடையேயான உறவு நன்றாக இருக்க ஷேக் ஹசீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும். மேலும் மாணவர்களின் போராட்டங்கள் பற்றிய கட்டுக்கதைகள் பரப்புவதை நிறுத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல வெளிநாடுகள் சந்தேகம் கிளப்பின. ஆனால் இந்தியா மட்டும் ஷேக் ஹசீனாவின் பக்கம் நின்றது.
நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் மக்களுக்கு எந்தவித அடிப்படை உரிமைகளையும் வழங்காமல் சர்வாதிகாரமாக செயல்பட்ட ஷேக் ஹசீனா பற்றி இந்தியா எந்த கேள்வியும் கேட்காமல் ஆதரவாக நின்றது. இதனால் வங்கதேசத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தியா மீது கோபமடைந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஷேக் ஹசீனாவின் பக்கம் இந்தியா இருந்தது தான். அதுமட்டுமின்றி ஜனவரி 7ம் தேதி தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்தியாவை புறக்கணிக்கவேண்டும் என்ற பிரசாரமும் வங்கதேசத்தில் தொடங்கியது'' என்றார்.












Click it and Unblock the Notifications