இந்தியாவில் கண்டறியப்பட்ட b 1.617 கொரோனா வகை 17 நாடுகளுக்கு பரவல்.. நிலைமை இப்படி மோசமாக காரணம் என்ன
ஜெனீவா: இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் B.1.617 வகை கொரோனா அமெரிக்கா, சிங்கப்பூர் எனக் குறைந்தபட்சம் 17 நாடுகளிலுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
கொரோனா பரவல் இந்தியாவில் இப்படி திடீரென அதிகரிக்க இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளகொரோனா வகை காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்திய வகை கொரோனா
இந்நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா குறைந்தபட்சம் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்போது இந்த வகை கொரோனா அதிகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டிய கொரோனா வகை
உலக சுகாதார அமைப்பு சமீபத்தில்தான் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகையை 'கவனத்தில் கொள்ள வேண்டிய கொரோனா வகை. குறிப்பிட்டிருந்தது. இருப்பினும். இப்போது வரை இந்த வகையை 'கவலை கொள்ள வேண்டிய கொரோனா வகை' எனப் பட்டியலிடவில்லை. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வகையைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வகைகள் உலக சுகாதார அமைப்பு 'கவலை கொள்ள வேண்டிய கொரோனா வகை' எனப் பட்டியலிடும்.

மோசமாகக் காரணம் என்ன
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சமாக உள்ளது. முதல்கட்ட தகவல்களைக் கொண்டு ஆராயும்போது, இந்தியாவில் பரவும் B.1.617 கொரோனா வகை அதிகளவில் கண்டறியப்படுவதாகவும் இது வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்தியாவில் இப்போது அனைத்து கொரோனா வகைகளும் வேகமாகவே பரவுகிறது. இது அனைத்தும் சேர்ந்து தான் இந்தியாவில் வைரஸ் பரவலைப் பல மடங்கு அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கூடுதல் ஆய்வு தேவை
இந்தியாவில் முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை இந்தியாவில் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காததே வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்தும் B.1.617 வகை கொரோனா குறித்தும் உடனடியாக கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications