இத்தாலியில் இந்திய தூதரகத்துக்கு பார்சலில் 'துப்பாக்கி குண்டுகள்'- பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை!
ரோம்: இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பார்சலில் 'துப்பாக்கி குண்டுகள்' வந்ததாலும் மின் அஞ்சல் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு கோரியுள்ளது.
2012ஆம் ஆண்டு கேரளா அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை இத்தாலி கடற்படை வீரர்கள் லட்டோன், சலவடார் ஆகியோர் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளான இருவரும் இத்தாலி சென்றநிலையில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்க, உச்ச நீதிமன்ற கண்டனத்தை அடுத்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
தற்போது விசாரணை தாமதமாவதால் இந்தியாவுக்கான இத்தாலி தூதரை திரும்பி அழைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் பார்சல் மூலம் துப்பாக்கி குண்டுகள் வந்துள்ளன.
இதனால் ரோமில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications