லண்டன் விமானத்தில் சிறுமியின் கன்னத்தை வருடி சில்மிஷம்... இந்தியருக்கு 4 மாத சிறை!
லண்டன்: டெல்லியில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்தியர் ஒருவருக்கு 4 மாத சிறை தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கிழக்கு மிட்லண்ட் பகுதியில் லைசெஸ்டர் நகரில் வசித்து வருபவர் மன்ஜித் சிங் சித்து (38) என்ற இந்தியர். இவர் கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, டெல்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார்.
விமான பயணத்தின் போது அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்துள்ளார் சித்து. இதனால், போதை தலைக்கேறிய நிலையில் தனது இருக்கையில் சித்து அமர வைக்கப் பட்டார். அப்போது சித்துவின் இருக்கைக்கு பின்புற இருக்கைகளில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் ஆசிரியருடன் அமர்ந்திருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, மது போதையில் பின் இருக்கையில் இருந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு சித்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அவளது முடியை கோதுவது, கன்னம் மற்றும் கழுத்தை வருடுவது என தொடர்ந்து அவர் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
மேலும், பாங்காங்கில் விலைமாதுக்களுடனான தனது அனுபவத்தையும் அச்சிறுமியிடம் அவர் விவரித்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் உறவு வைத்துக்கொள்ளலாமா என அவர் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, சித்துவின் சில்மிஷங்கள் தொடர்பாக தனது ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் வாயிலாக இப்புகார் விமானியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. எனவே, இது தொடர்பாக லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லண்டன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதும், மன்ஜித் சிங் சித்து விமானநிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
விசாரணையின் முடிவில், 14 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சித்துவுக்கு நீதிமன்றம் 4 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அத்துடன், பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சித்து 7 ஆண்டுகள் வரை கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.