ஓமனில் ஷாப்பிங் சென்றபோது கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை பலி
துபாய்: ஓமனில் நடந்த சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் அருண் குமார்(28). திருமணம் முடிந்த கையோடு அவர் கடந்த மாதம் அரபு நாடான ஓமனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் தெற்கு ஓமனில் உள்ள தோஃபார் மாகாணத்தின் தலைநகரான சலாலாவில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக இருந்தார். நேற்று அவர் அஜீஷ், ரஜீப் மற்றும் மூஸா ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். சலாலா அருகே செல்கையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து தாறுமாறாக ஓடிய கார் ஒரு போஸ்ட் மீது மோதியது. இதில் அருண் குமார் பலியானார். மீதமுள்ள அஜீஷ், ரஜீப் மற்றும் மூஸா ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சலாலாவில் உள்ள சுல்தான் கபூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஜீஷ் மற்றும் ரஜீப் ஆகியோருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. மூஸாவுக்கு கால் உடைந்துள்ளது. அவர்கள் ஷாப்பிங் சென்றபோது தான் இந்த விபத்து நடந்தது.












Click it and Unblock the Notifications