ஆஸ்திரேலியா: ரயில் முன்பு பாய்ந்து 18 மாத பேத்தியை காப்பாற்றிய இந்திய தாத்தா
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த தனது 18 மாத பேத்தியை காப்பாற்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் தனது மகன், மருமகள், 18 மாத பேத்தியை பார்க்க சென்றார். அவர், அவரது மனைவி, மருமகள், பேத்தி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள சீக்கிய கோவிலுக்கு சென்றனர்.

அவர்கள் சிட்னி நகரில் உள்ள வென்ட்வொர்த்வில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது குழந்தை இருந்த பிராம் என்னும் தள்ளு வண்டி கை நழுவி ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. குழந்தை பிராமில் தண்டவாளத்தில் கிடப்பதை பார்த்த அதன் தாய் அலறினார்.
அந்த நேரம் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த 62 வயது தாத்தா தனது உயிரைப் பற்றி யோசிக்காமல் தண்டவாளத்தில் குதித்து குழந்தையை பிராமுடன் தூக்கி பிளாட்பாரத்தில் நின்ற தனது மனைவியிடம் கொடுத்தார். பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச் சென்று பிளாட்பாரத்தில் ஏறினார்.
தாத்தாவின் இந்த சாகச சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தில் லேசான காயம் அடைந்த தாத்தாவும், பேத்தியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது குறித்து குழந்தையின் மாமா பர்மிந்தர் சிங் கூறுகையில்,
அவர் தனது உயிரைப் பற்றி யோசிக்காமல் குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவர் அருமையான காரியத்தை செய்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications