சிங்கப்பூரில் பயங்கரம்.... 14வது மாடியிலிருந்து குதித்து இந்திய பணிப் பெண் தற்கொலை!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வேலை பார்த்து வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்வீந்தர் கெளர் என்ற பணிப் பெண், வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட மோதலில் 14வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கப்பூரின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள பெடாக் ரிசர்வாயர் வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்தவர் பல்வீந்தர் கெளர். இவர் தான் வேலை பார்த்து வந்த வீட்டில் 2 முறை திருடியதாக புகார் கூறப்பட்டு வேலையை விட்டு நீக்கப்பட்டார். அவரை நாடு கடத்தவும் சிங்கப்பூர் காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியில் உள்ள வீட்டு உரிமையாளரைச் சந்தித்துப் பேச கெளர் வந்துள்ளார். தன்னை மன்னித்து விடுமாறும், தான் சொந்த ஊரில் நிறைய கடன் வாங்கியுள்ளதாகவும், வேலையிழந்து திரும்பினால் பெரும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்றும், எனவே தன்னை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
ஆனால் வீட்டு உரிமையாளர் அதை ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது கெளரை விமர்சித்து வீட்டு உரிமையாளர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கெளர் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து உரிமையாளரின் தலையில் அடித்தார். பின்னர் அங்கிருந்து வேகமாக வெளியே ஓடி வந்து மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் கெளர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.