5 லட்சம் பேரை நாடு கடத்துவேன்.. இந்திய வம்சாவளி ரூபி தல்லா அதிரடி.. இவர் தான் கனடாவின் லேடி டிரம்ப்?
ஒட்டாவா: நான் கனடா பிரதமர் ஆனால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று அந்த நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் அவர் கனடாவின் பெண் டொனால்ட் டிரம்ப்பா? மாறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள்.

இதன்மூலம் அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி அளித்தார்.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 20ம் தேதி அவர் அமெரிக்காவின் அதிபராக முறைப்படி பொறுப்பேற்ற நிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு கடத்த தேவையான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. டொனால்ட் டிரம்பின் உத்தரவால் இந்தியாவை சேர்ந்த 18 ஆயிரம் பேர் விரைவில் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் கனடா, அமெரிக்கா இடையே தற்போது மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்பை போல் கனடாவின் பிரதமர் வேட்பாளர் ரேஸில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபி தல்லாவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் தான் கனடாவின் பெண் டொனால்ட் டிரம்ப் என கூறும் வகையில் அவரது அறிவிப்பு உள்ளது. இதுதொடர்பாக ரூபி தல்லா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
கனடாவின் அரை மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம், அரை மில்லியன் என்றால் 5 லட்சம்) மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்த பெற்றோரின் ஒரு மகளாக நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இது சட்டவிரோதமானது. உங்களின் பிரதமராக நான் உங்களுக்கு ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது'' என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரூபி தல்லா கனடாவின் லிபரல் கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சியை சேர்ந்தவர் தான் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வந்தார். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கிடையே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்கட்சியிலேயே திடீரென்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவை தொடர்ந்து லிபரல் கட்சி சார்பில் நிறைய பேர் பிரதமர் பதவி மீது கண்வைத்து காய்நகர்த்தி வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த ரூபி தல்லா. இவர் ஒரு இந்திய வம்சாவளி ஆவார். கனடாவின் பிரம்ப்டன்-ஸ்பிரிங்டாலி பகுதியின் எம்பியாக இருந்தார். 2004 முதல் 2011 வரை எம்பியாக அவர் நீடித்தார். தற்போது அவர் கனடாவின் பிரதமர் ரேஸில் உள்ளார்.
இதனை அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மிக்க நன்றி, கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் அடுத்த பிரதமராகவும் முதல் முதலாக பெண் ஒருவரை தேர்வு செய்து வரலாற்றை உருவாக்கும் விளிம்பில் நாம் இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ரூபி தல்லா லிபரல் கட்சியில் பிரதமர் ரேஸில் நுழைந்துள்ளார். இந்நிலையில் தான் நான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களை நாடு கடத்துவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் ரூபி தல்லா தான் டொனால்ட் டிரம்புக்கான கனடாவின் லேடி வெர்ஷனா?












Click it and Unblock the Notifications