அருணாசல பிரதேசம் எங்களுக்கே.. ஷாங்காய் ஏர்போட்டில் இந்திய பயணியிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்
பீஜிங்: "அருணாசல பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது, எனவே உங்கள் பாஸ்போர்ட் செல்லாது" என்று கூறி இந்திய பயணி ஒருவரை ஷாங்காய் விமான நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 18 மணி நேரம் ஷாங்காய் விமான நிலையத்தில் வைத்து 'விசாரணை' என்ற பெயரில் கேலி செய்து இருக்கிறார்கள் சீன அதிகாரிகள்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா அடாவடி செய்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறிக்கொண்டு அவ்வப்போது எல்லையில் வாலாட்டுவதை சீனா வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

பல மணி நேரம் காக்க வைத்த அதிகாரிகள்
சீனாவின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் சீனா திருந்திய பாடியில்லை. இதை நிரூபிக்கும் வகையில்தான் மீண்டும் ஒரு சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. அருணாசல பிரதேசத்தை சேர்ந்த பெண் பயணி ஒருவரை, "உங்களின் பாஸ்போர்ட் செல்லாது" என்று பல மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கிறார்கள் சீன அதிகாரிகள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
அருணாசல பிரதேசத்தை சேர்ந்த பெண் பெம் வங் தாங்டோக். லண்டனில் வசித்து வரும் அவர், கடந்த 21ஆம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு விமானத்தில் சென்றார். விமானம் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் ட்ரான்சிட் க்காக தரையிறங்கியது. மூன்று மணி நேர காத்திருப்புக்கு பிறகு விமானத்தில் ஏற பயணிகள் தயாராக இருந்தனர்.
பாஸ்போர்ட் செல்லாது என கூறி
அப்போது இந்திய பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கிய ஷாங்காய் விமான நிலைய அதிகாரிகள், "அருணாசல பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது, எனவே உங்கள் பாஸ்போர்ட் செல்லாது" என்றும் கூறி, அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 18 மணி நேரம் ஷாங்காய் விமான நிலையத்தில் வைத்து 'விசாரணை' என்ற பெயரில் கேலி செய்து இருக்கிறார்கள் சீன அதிகாரிகள். இந்திய பெண்ணின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த சீன அதிகாரிகள், ஜப்பான் செல்ல விசா இருந்தும் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
கிண்டல் செய்ததாக
குடியேற்ற அதிகாரிகள் மட்டும் இன்றி சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னை கிண்டல் செய்ததாக தாங்டோக் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சீனா பாஸ்போர்ட் க்கு விண்ணப்பிக்கலாமே" என்றும் கேலி செய்துள்ளனர்.
மேலும், விமான நிலையத்தில் உணவு வசதி கூட செய்து தர மறுத்துவிட்டதாகவும், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் புதிய டிக்கெட் வாங்கிய பிறகே பாஸ்போர்ட்டை தந்து பயணம் செய்ய அனுமதி அளித்ததாகவும், இந்திய தூதரக அதிகாரிகளை தனது நண்பர் மூலமாக தொடர்பு கொண்ட பிறகே தனக்கு எந்த நெருக்கடியும் இன்றிப் பயணம் செய்ய அனுமதி கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலையிட வேண்டும்
சீன குடியேற்ற அதிகாரிகளின் இந்த செயலால் கடுமையான நிதி இழப்பு தனக்கு ஏற்பட்டதாகவும் கூறிய தாங்டோக், "இந்திய இறையாண்மையை இழிவுபடுத்தும் செயல் இது" எனவும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தை சீனாவிடம் எழுப்பி, அருணாசல பிரதேச மக்களுக்கு எந்தப் பாரபட்சமும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அருணாசல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணின் இந்த பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் இந்த அடாவடி செயலை கண்டித்துள்ள நெட்டிசன்கள், சீனாவின் பேராசையால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, அருணாசல பிரதேச மக்கள் எத்தகைய இக்கட்டான சூழலை எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது எனவும் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications