ஷார்ஜாவில் குட்டீஸ்களுக்காக நூலகம் துவங்கிய இந்திய பெண்
ஷார்ஜா: ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளுக்காக இந்திய பெண் ஒருவர் நூலகம் துவங்கி நடத்தி வருகிறார்.
ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் வகையில் ‘திவ்யா நூலகம்' கடந்த டிசம்பர் மாதம் முதல் அபு சகரா பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது.
'இன்றைய வாசகர் நாளைய தலைவர்' எனும் வாசகத்தை மையமாகக் கொண்டு இந்நூலகம் செயல்பட்டு வருவதாக நூலகத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யா கேஹானி தெரிவித்துள்ளார்.

திவ்யா கேஹானி
திவ்யா கேஹானி உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது குழந்தைகள் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் ஏராளமான நூல்கள் வாங்கி வருகிறார்.

நல்ல எண்ணம்
தனது குழந்தைகளுக்காக வாங்கும் நூல்கள் பிற குழந்தைகளுக்கும் பயனளிக்க வேண்டும் எனும் நன்னோக்கத்துடன் இந்நூலகம் துவக்கப்பட்டுள்ளதாக திவ்யா தெரிவித்தார்.

நூல்கள்
துவக்கத்தில் ஆங்கில நூல்கள் மட்டும் இருந்தாலும் விரைவில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்களும் இந்நூலகத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார் திவ்யா.

பெற்றோர்
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினாலும் நூலகத்தை தங்களது குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று திவ்யா கேட்டுக் கொண்டார்.

பணிநேரம்
நூலகம் தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. இது குறித்து மேலும் விபரம் அறிய 06 537 04 08 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications