துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரபல இந்திய யூடியூபர்! வீடியோக்களை போட்டவுடன் திடீரென கைது! என்ன காரணம்?
அங்காரா: இந்தியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் துருக்கி நாட்டிற்குச் சென்றுள்ளார். துருக்கியைச் சுற்றிப் பார்த்த அந்த நபர் அங்கிருந்தபடியே பல்வேறு வீடியோக்களை எடுத்தும் பதிவிட்டு இருக்கிறார். இதற்கிடையே துருக்கி நாட்டின் பெண்களைப் பற்றி அவதூறு கருத்துகளைக் கூறியதாக அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தே வருகிறது. பலரும் புதுப்புது நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்க்க விரும்புகிறார்கள். இன்னும் சில யூடியூப் பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்று அதை வீடியோவாக பதிவிடுவதையும் கூட ஒரு வேலையாக வைத்துள்ளனர்.

துருக்கி யூடியூபர்
அப்படி தான் இங்கு இந்தியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் துருக்கி நாட்டிற்குச் சென்றுள்ளார். இதற்கிடையே துருக்கி நாட்டை சேர்ந்த பெண்கள் குறித்து மிக அவதூறான கருத்துகளைப் பேசியதாக அவரை துருக்கி போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் கைது செய்யப்பட்ட அவர் பிரபல இந்தி யூடியூபர் மாலிக் எஸ்டி கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 'மாலிக் ஸ்வாஷ்பக்லர்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
மாலிக் எஸ்டி கான் சமீபத்தில் துருக்கி நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே அவர் துருக்கி நாட்டின் பெண்கள் குறித்து ஆபாச கருத்துகளைக் கூறி, அதை வீடியோவாகவும் எடுத்து தனது சேனலில் பதிவிட்டுள்ளார். அவரது வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோக்கள் அவரது சேனலில் இருந்து நீக்கப்பட்டன.
மிக மோசம்
ஏற்கனவே அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அது தொடர்பான சில வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் துருக்கியைச் சேர்ந்த உள்ளூர் மக்களுடன் உரையாடுகிறார். அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் மிக மோசமாக ஆபாசமான கருத்துகளை அவர் இந்தியில் கூறுகிறார். மேலும், சில வீடியோக்களில் அவர் துருக்கி பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துகளைக் கூட வெளிப்படையாகப் பேசுகிறார். இதைத் தான் அவர் வீடியோவாக எடுத்து தனது சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார்.
ஆபாசம்
ஒரு வீடியோவில் பெண்களைத் தனது உணவு என்பது போலச் சொல்கிறார். மற்றொரு வீடியோவில் தனக்கு வழிகாட்டியாக இருக்கும் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்யலாமா எனக் கேட்கிறார். இதுபோல பல ஆபாச கருத்துகளைக் கூறி வீடியோக்களை அவர் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். மேலும், மற்றொரு வீடியோவில் அவர் துருக்கியில் உள்ள ஒரு கடைக்குள் செல்கிறார். அங்குப் போய் ஏன் இந்தியக் கொடியை நீங்கள் பறக்கவிடவில்லை எனச் சொல்லி மிக மோசமான வார்த்தைகளைச் சொல்லி திட்டுகிறார். அதையும் வீடியோவை எடுத்துப் பதிவிட்டுள்ளார்.
கைது
இந்தி தெரிந்த துருக்கி நாட்டை சேர்ந்த சில யூசர்கள் தான் முதலில் அவரது வீடியோக்கள் குறித்து புகார் எழுப்பியுள்ளனர். தொடர்ந்து துருக்கி முழுக்க அவரது வீடியோக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் மாலிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து துருக்கி போலீசார் மாலிக்கை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் மாலிக்கை கைது செய்தது தொடர்பாக அல்லது அவர் மீது நடத்தப்படும் விசாரணை தொடர்பாகத் துருக்கி அதிகாரிகள் இதுவரை எந்தவொரு செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications