இந்தோனேசியாவில் 2 குழந்தைகள் உள்பட 10 பேருடன் கிளம்பிய விமானம் மாயம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் 10 பேருடன் கிளம்பிய சிறிய ரக விமானம் சுலாவெசி தீவில் மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள மசாம்பாவில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான நிறுவனமான ஏவியஸ்டருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 10 பேருடன் கிளம்பியது. 2 குழந்தைகள் உள்பட 7 பயணிகள், 3 விமான ஊழியர்களுடன் விமானம் மகாசாருக்கு கிளம்பியது.
இந்நிலையில் விமானம் கிளம்பிய வேகத்தில் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேட மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானம் கிளம்பிய 7வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜூலியஸ் பராடா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் இந்தோனேசியாவில் மூன்று விமான விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ போக்குவரத்து விமானம் சுமத்ராவில் உள்ள மேடனில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 140 பேர் பலியாகினர். அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
கடந்த டிசம்பர் மாதம் ஏர்ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 192 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.