அதிகாலையில் குலுங்கிய இந்தோனேசியா! நடுங்கிய மக்கள்! 6 ரிக்டரில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை இல்லை
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வரை எதுவும் வெளியாகவில்லை.
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு இந்தோனேசியா. தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.
அது ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாக இருக்கிறது. நிலநடுக்கம் மட்டுமின்றி எரிமலைகள் சூழ்ந்து இருப்பதால் அதன் வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படும்.

நிலநடுக்கம்
இதனிடையே இன்று காலை அங்கு திடீரென சக்திவாயந்த் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மேற்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது பாதிப்புகள் எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எங்கு ஏற்பட்டது
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கரையோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆச்சே மாகாணத்தில் உள்ள சிங்கில் நகரிலிருந்து 48 கிலோமீட்டர் தென்கிழக்கே 48 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் கொஞ்ச நேரத்தில் வெளி வரத் தொடங்கும்.

சுனாமி எச்சரிக்கை இல்லை
பொதுவாக நிலநடுக்கம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து சுனாமி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமிக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் புவியியல் ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுக்கும். அப்போது தான் அதற்குள் கடற்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும். இப்போது இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ரிங் ஆஃப் ஃபயர்
"ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியின் மீது அமைந்துள்ளதே இப்படி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகும். "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதிகளில் நிலத்திற்கு அடியே டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதும். அதுவே நிலநடுக்கத்திற்கும் எரிமலை வெடிப்பிற்கும் காரணமாக அமைகிறது. முன்னதாக கடந்த நவம்பர் 21இல் ஏற்பட்ட 5.6 ரிக்டர் நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் காயமடைந்தனர். அதேபோல 2018இல் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications